Sunday, December 01, 2019

சுந்தர காண்டம் - 5 - சாகஸ நாயகன்

பக்தியாலும் அனுமன் மீது கொண்ட பேரன்பாலும் நமக்குப் பல விஷயங்கள் புலப்படுவதேயில்லை.

1. அனுமன் சீதாப் பிராட்டியை இதற்கு முன் கண்டது இல்லை. முன்னே பின்னே அறிந்திராத ஒருவரை, பலத்த பாதுகாப்பை அரணாகக் கொண்ட இலங்கையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவாலான பணியை அனுமன் தவிர யாரால் முடித்திருக்க இயலும்?

2. வழியில் எங்கும் தங்க மாட்டேன் என்கிற வாக்கைக் காப்பாற்றுவதற்காக, முதல் நாள் பகலில் கிளம்பி, இரவில் இலங்கையில் தேடி, அதிகாலையில் சீதாப் பிராட்டியக் கண்டு, காலையில் ராக்ஷஸர்களை யுத்தத்திற்கு அழைத்து, இராவணேசுவரனுக்கு உபதேசித்து, வாலில் வைத்த நெருப்புக்கு இலங்கையை உணவாக்கிப் பின் உடனே திரும்பும் - ஒரு நாள் - அசகாயச் செயல்களைக் கொண்டது சுந்தர காண்டம்.

3. ஒரு தூதன் நடந்து கொள்ள வேண்டிய முறை, அறிவின் நுட்பம், செய்ய வேண்டிய பணிக்கு ஊறு விளைக்காத இதர செயல்களின் மூலம் தலைவனின் பெருமையை உணர்த்தி மேலும் உயரச் செய்தல். இவைகளை அனுமன் செவ்வனே செய்தான்.

4. எந்த ஒரு சவால்கள், சிக்கல்கள் நிறைந்த பணியில், கதையின் நாயகன் வெற்றி பெறுவான் என்பது நமக்கு முதலிலேயே தெரியும்; அது போலத்தான் அனுமன் வென்றே தீர வேண்டும் என்கிற முடிவுக்கு நாம் எட்டிவிடுவதால், அவரது அசகாயச் செயல்களை நாம் எளிதாகப் பார்க்கிறோம். ஆனால், அவனோ ஒவ்வொரு பணியையும் செய்து முடித்தவுடன் தன் தலைவனும், இறைவனும் ஆன இராமபிரானுக்கு அர்ப்பணித்து விட்டான்.

5. யாரிடம் என்ன சொல்லவேண்டும், எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எந்தச் சூழலில் எப்படி இயங்க வேண்டும் என்பதை அனுமனைத் தவிர யாரும் அறிந்ததில்லை.
சுந்தர காண்டம் ஒவ்வொரு ஸர்க்கத்திலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

அனுமன் கடல் கடந்து இலங்கையை அடைந்து விட்டான். நாம், இன்னும் சுந்தர காண்டம் கடலில் மூழ்காது, அலைகளில் கால்களை நனைய விட்டு, ஆனந்தமாயிருக்கிறோம்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers