Friday, December 06, 2019

சுந்தர காண்டம் - 10 - மதிமுட்டுவன மாடம்

ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதற்குள் களைப்பு மேலிடுகிறது; அதே போல அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்கும்.

ஆனால், நாம் போற்றும் பணிவு கொண்ட, தன்னம்பிக்கை நிறைந்த, ஆற்றல் மிக்க அனுமன், யாராலும் தாண்ட முடியாத பெருங்கடலைத் தாண்டிய பின் எப்படி இருந்தான்?

சிறிது கூடச் சிரமமில்லாமல், திரிகூட மலையின் மீதிருக்கும் இலங்கையைக் காண்கிறான்.
மலர்களால் உதிர்க்கப்பட்ட மலர்களின் மழையில் மூழ்கடிக்கப்பட்ட அனுமன், பெருங்கடலைக் கடந்த வந்த சுவடே தெரியாது, பெருமூச்சு விடாது, வாட்டமில்லாது இருக்கிறான்.

சந்திரன் தோன்றியதும் லங்கை கண்கொள்ளாக் காட்சியாகி ஆகாயத்தில் மிதக்கும் விந்தையெனத் தோன்றுகிறதாம் அனுமனுக்கு.

கிரிமூர்த்நி ஸ்திதாம் லங்காம்
பாண்டரைர்ப வநை: ஸுபை: |
ஸத்தர்ஸ: கபி: ஶ்ரீமாந்
புரம் ஆகாசகம் யதா || (ஸர்க்கம் 2, சுலோகம் 19)

கம்பநாடன் வான்மீகி வழி வந்தவனாயிற்றே? சும்மா இருப்பானா?

பொன்கொண்டு இழைத்து
மணியைக்கொடு புனைந்த
மின் கொண்டு இழைத்த
வெயிலைக்கொடு சமைத்த,
என் கொண்டியற்றிய?
எனத் தெரிகிலாத
வன் கொண்டல் தாவி
மதிமுட்டுவன மாடம்.

லங்கையின் செல்வத்தையும், நகர அமைப்பையும் வர்ணிக்கும் போது, அவை பொன் கொண்டு இழைத்த மாடமாளிகைகளில் ரத்னங்கள் பொதிந்திருந்தன என்கிறான். அவை 'மின்னலில் ஒளி கொண்டோ, சூரியனின் ஒளிகொண்டோ, எதைக் கொண்டு இயற்றப்பட்டன?' என்று திகைக்கும் வண்ணம், வானைத்தை முட்டி நிற்கின்றன என அனுமனோடு சேர்ந்து கம்பனும் வியக்கிறான்.

'சீதாப்பிராட்டியைத் தேடுமுன் என்ன செய்ய வேண்டும்?' என்று யோசிக்கத் துவங்குகிறான் அனுமன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers