Wednesday, December 11, 2019

சுந்தர காண்டம் - 15 - சந்திர வர்ணனை

வான்மீகி முனிவர் சந்திரனை எட்டு ஸ்லோகங்களில் வர்ணிக்கிறார் (ஸர்க்கம் 5, சுலோகம் 1-8); இதோடு நில்லாது சந்திரனால் இலங்காபுரியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் விரிவாகக் கூறுகிறார்.

சந்திர வர்ணனை ஒப்பற்றதாகக் கருதப்படுகிறது.
  • ஆகாயத்தின் நடுவில் வந்துள்ளது,
  • கிரணங்களுடன் கூடியது,
  • பேரொளி வெளிப்படுத்திக் கொண்டிருப்பது,
  • கொட்டிலில் மதங்கொண்ட காளை திரிவதைப் போல ஒப்பது,
  • பாவங்களின் சம்பளமான துயரத்தைப் போக்குவது,
  • பெருங்கடலைப் பொங்கச் செய்வது,
  • ஆகாய வீதியில் சென்று கொண்டிருப்பது,
  • திருமகளின் ஒளி, செழுமை, உற்சாகம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவைகளின் உருவகத் தேவதை,
  • கூர்மையான கொம்புகளையுடைய காளை,
  • உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலை,
  • முயல் அடையாளமுள்ளது,
  • அரசாட்சியை அடைந்த மன்னன் போல,
எனப் பலவாறு வான்மீகி சந்திரனைச் சிலாகிக்கிறார்.

கம்பநாடன் கொஞ்சம் வித்தியாசமாய்ச் சிந்திக்கிறான்.

இராமபிரானுடைய தூதன் இலங்காபுரிக்கு வந்ததால், என் தந்தை இந்திரன் நல்வாழ்வை அடைந்து விட்டான் என்று நினைத்து, அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, எல்லை இல்லாத கிழக்குத் திசையில், சுருளான கூந்தல் அசைந்தாடும் நெற்றியை உடைய அழகியின் முகம்போல வெளிப்பட்டானாம்!

வந்தனன்இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையேஇந்திரன் ஆம் என்று ஏமுறா
அந்தம்இல்கீழ்த்திசை அளகவாள் நுதல்
சுந்தரிமுகம்எனப் பொலிந்து தோன்றிற்றே.

அளகவாள் நுதல் - சுருளான குழல் அசைந்தாடும் நெற்றி.

சந்திரனின் ஒளி, அனுமனோடு தொடர்பு கொண்டதால், சிறந்த குணங்களைக் கொண்ட இராமபிரானால் ஏவப் பெற்ற ஒப்பற்ற அம்பு போலப் பரவியதாம்.

'இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் பகழியின் செலவு என.'

இகழ்வு அரும் என்பது குறிப்பிடத்தக்கது. பழிக்கபடுதல் அல்லாத பெரும் குணம் கொண்ட பெருமான் இராமபிரான் என்கிறான் கம்பநாடன்.

உண்மைதானே?!

No comments:

முந்தைய பதிவுகள்

Followers