Thursday, December 26, 2019

சுந்தர காண்டம் - 31 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டி நிலை எப்படி இருக்கிறது?

மெலிந்திருப்பதால், இன்னார் என்று ஊகித்து அறியக்கூடிய உருவம். புகைக்கூட்டத்தால் மறைக்கப்பட்ட அக்னிக் கனல். அழுக்கடைந்த பட்டாடையை உடுத்தியவள்.

அழுக்குப் படிந்தவள்; அலங்காரம் இல்லாதவள்; தாமரை மலர்கள் இல்லாத குளத்தைப் போன்றவள். இலக்குவனை அவமதித்துப் பேசியதால் உண்டான வெட்கம் உடையவள். சோகத்தால் தவித்துக் கொண்டிருப்பவள்; வாடிப் போயிருப்பவள்.

விரதங்களையும், அன்றாட அனுஷ்டானங்களையும் மேற்கொண்டிருப்பவள்; அங்காரகனால் (செவ்வாய்க் கிரகம்) ஆட்கொண்டிருக்கும் ரோஹிணி நட்சத்திரத்தைப் போன்றவள். கண்ணீர் வழியும் முகம்; நலிவை அடைந்தவள்; உணவு உட்கொள்ளாததால் இளைத்தவள்.

இராமபிரானையே என்றும் துதிப்பதால், அவரைப் பிரிந்ததால் உண்டான சோகத்தில் இருப்பவள். எளியவள்; எப்போதும் துக்கத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவள்.

தன்னிடம் அன்பு கொண்ட மக்களைக் காணாதவள்; இராக்ஷஸிகளின் கூட்டத்தையே பார்த்துக்கொண்டு இருப்பவள்; தன் கூட்டத்தை விட்டு விலகிப் போய், நாய்களின் கூட்டத்தில் சேர்ந்த பெண்மானைப் போன்றவள்.
பின்பாகம் தொடும் அளவுக்கு நீண்ட கருநாகம் போன்ற ஒற்றைப் பின்னலை உடையவள்; மழைக்காலங்களில் கரும்பச்சையான மரங்கள் கொண்ட பூமி போன்ற கருங்கூந்தலால் அழகாக விளங்குபவள்.

சுகத்தை அனுபவிக்க தக்கவள்; சோகத்தில் மூழ்கியிருப்பவள்.

கம்பநாடன் விவரிப்பும் இப்படித்தான் சொல்கிறது.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers