Tuesday, December 31, 2019

சுந்தர காண்டம் - 36 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டியின் துயரையும் கற்பு நிலையினையும் அனுமன் கண்ட காட்சியாகவே வான்மீகி முனிவர் அமைத்திருக்கிறார்.  ஆயின் கம்பநாடன், சீதாப்பிராட்டியின் புறக்காட்சியையும், மனநிலையையும், அனுமன் காண்பதற்கு முன்பே படம் பிடித்து விடுகிறான்.  

அரக்கியர்கள் நடுவில் அமையும் சீதாப்பிராட்டி தனக்குத் தோன்றிய நற்சகுனங்களைக் கூறியவுடன், திரிசடை தான் கண்ட கனவினை விளக்குகிறாள்.  இராமபிரானை எண்ணி, எண்ணி ஏங்கியும், கொல்லாமல் கொல்லும் நினைவுகளுடன் மனம் நொந்த சீதாப்பிராட்டியின் உண்மை நிலை விளங்கப் பெறுகிறது.   இதன் பின்பே அவரின் இருக்குமிடத்தை அனுமன் காண்பதாக அமைக்கிறான் கம்பநாடன்.


இதனாலேயே சீதாப்பிராட்டியின் தூய்மையைக் கண்டு அனுமன் உயர்வாகப் பேசிக்கொண்டதைச் சுருக்கமாக அமைத்துவிடுகிறான் கம்பநாடன். 


காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் 

ஏசுண்ட தில்லையாள்; அறத்துக்(கு) ஈறுண்டோ? 

சீதாப்பிராட்டியின் கற்பும் காதாலும் காத்து இருப்பதால்,  தர்மத்திற்கு என்றும் இடையூறு இல்லை என்றுத் தெளிகிறான் அனுமன்.


வான்மீகி முனிவர் இதையே,


பொன்னிற அங்கங்களையுடையவளும், இராமபிரானின் பிரியத்திற்குப் பாத்திரமான பட்டத்து அரசியும்,  கற்பு நெறியிலிருந்து பிறழாதவளும்


என்கிறார்.


'தன்னைச் சேர்ந்த பெண்ணைக் காப்பாற்றாது விட்டு விட்டேனே?' என்று இரக்கம்;


'தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பது என்கிற கொள்கை தவறிப்போனதே?' என்று உருக்கம்;


'அக்னி சாட்சியாய் மணந்தவரை இழந்தேனே' என்று சோகம்;


'பிரிய சகியைப் பிரிந்தேனே' என்று காமம்;


என எவர் பொருட்டு இராமபிரான் நான்கு விதங்களாகத் தவிக்கிறாரோ அவரே இவர்.


சீதாப்பிராட்டியின் மனம் இராமபிரானிடத்திலும், இராமபிரானின் மனம் சீதாப்பிராட்டியிடத்திலும் நிலைத்திருக்கிறது.  அதனால்தான் இருவரும் இதுநாள் வரை உயிரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


என அனுமன் இன்னும் வியந்து கொண்டுதானிருக்கிறான்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers