Saturday, December 14, 2019

சுந்தர காண்டம் - 18 - இராவணேசுவரனின் அந்தப்புரம்

செல்வம் கொழிக்கும் இராவணேசுவரனின் மாளிகையில் தடையின்றி உலாவுதலே நல்ல சகுனம் எனத் தன்னைத் தேற்றிக் கொண்டு மேலும் தேடத் துவங்குகிறான் அனுமன்.

'சுவர்க்கம் என்பது இதுதானா? தேவலோகமா? இந்திரன் வாழும் அமராவதியா? களை சொட்டும் இம்மாளிகையைத் தன் மீது பிரியம் கொண்ட நாயகியைப் பார்த்துக் கொள்வது போலப் பரமாரிக்கிறானே இராவணேசுவரன்' என்று வியக்கிறான் அனுமன்.

பெரியதோர் கம்பளத்தில் பெண்களின் கூட்டம் ஒன்று - மதுபான மயக்கம், போகங்களில் ஈடுபட்ட களைப்பு - நித்திரையில் ஆழ்ந்திருப்பது, சூரியனின் மறைவுக்குப் பின் அன்னமும், வண்டும் ஓய்வெடுத்த அமைதி நிறைந்த தாமரைத் தடாகம் போலத் தோன்றுகிறது அனுமனுக்கு.

அம்புஜானீவ புல்லானி ப்ரார்த்தயந்தி புன: புன: என்கிறார் வான்மீகி முனிவர்.

நட்சத்திர நாயகியர் கூட்டம் நடுவே சந்திரனைப் போல விளங்கும், அயர்ந்து தூங்கும் இராவணேசுவரனைப் பார்க்கிறான் அனுமன்.
ராஜகளை, விரிந்த மார்பு, பரந்த தோள், திரண்ட புஜம், மெல்லிய வெண்ணிற ஆடை மார்பில், மஞ்சள் பட்டாடை இடுப்பில், 'கரு கரு'வென உளுந்து போன்ற உடல் கொண்ட அசுரவேந்தன், கங்கையில் அமுங்கியவாறே உறங்கும் யானையெனத் தோன்றுகிறது அனுமனுக்கு.

கம்பநாடன் மிகவும் விரிவாக இராவணேசுவரனின் துயில் நிலை, அழகு, கம்பீரத்தை விவரிக்கிறான். கும்பகருணனைப் பார்த்தவுடனேயே சினங் கொண்ட அனுமன், அவன் தமையனைப் பார்த்தால் சும்மா இருப்பானா? கடலைப் போலப் பொங்கி வரும் சினத்தினால், 'இவனைக் கொன்று விடலாமா?' என்று ஒரு கணம், ஒரே கணம் சிந்திக்கிறான்.

தாள் ஆற்றலால் இடித்துத்
தலை பத்தும் தகர்த்து இன்றென்
ஆள் ஆற்றல் காட்டேனேல்
அடியேனாய் முடியேனே !

என் கால் வலிமையால் தாக்கி, பத்து தலைகளையும் பொடிப்பொடியாக்கி, இன்றைய தினத்தில் என் அடிமையின் வலிமையைக் காட்டாது போனால், தொண்டு புரிபவனாகக் கருதப்பட மாட்டேன் என்கிற அளவுக்குச் சிந்தனை செல்கிறது அனுமனுக்கு.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers