Tuesday, December 24, 2019

சுந்தர காண்டம் - 29 - அசோகவனம்

கம்பநாடன் ஒரே பாடலில் 'அசோகவனத்தில் நுழைந்து விட்டான் அனுமன்' என்கிறான்; ஆயின், வான்மீகி முனிவர் ஸர்க்கம் 14 (51 ஸ்லோகங்கள்) முழுவதையும் அசோகவன வர்ணனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் சுவாமிகள் மற்றும் கீதா பிரஸ் உரையும் படிக்கும்போது வான்மீகி முனிவரின் அபரிமிதமான ரசனையை வியக்கவே தோன்றுகிறது.

வசந்த காலத் துவக்கம்; அனுமன் மதிற்சுவரில் இருந்தபடி பலவித மரங்களைக் காண்கிறான்; இராமபிரான் தொடுத்த அம்பினைப் போல மரச்சோலைக்குள் பாய்கிறான் அனுமன்.

தூங்கிக் கொண்டிருந்த பறவைகளை எழுப்ப, அவைகள் பறக்கத் துவங்க, இறக்கைகளால் அடிக்கப்பட்ட மலர்கள் அனுமன் மேல் மாரியாய்ப் பொழிய, மலர்களான மலை போல விளங்குகிறான் அனுமன்.

அவன் வேகத்தால் மலர்கள்/இலைகள்/பழங்களை பூமியில் விழுகின்றன. இவைகள் இல்லாத மரங்கள், எல்லாவற்றையும் இழந்த சூதாடிகள் போல வெறுமையாய் நிற்கின்றனவாம்.

ஏராளமான கொடிகள் சூழ்ந்த, சுற்றிலும் பொன் மேடைகள் அமைக்க்பட்ட, தங்க நிறத்தையொத்த, கிளைகளின் நுனியில் மலர்களைக் கொண்ட, அழகியதும் சிவந்த முளை-தளிர்க்ளைக் கொண்ட, இலைகள் அடர்ந்துள்ள சிம்சுபா மரத்தைக் கண்ட அனுமன் அதில் ஏறிக் கொள்கிறான்.

பறவைக் கூட்டங்கள் நிறைந்த இந்த தாமரை ஓடை நன்றாயிருப்பதால்,

காட்டு விலங்குகளிடம் அன்பு காட்டும் தன்மை இயல்பாகவே இருப்பதால்,

(காலை) சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்வதற்காக,

சீதாப்பிராட்டி இங்கு நிச்சயம் வருவார் என்கிற நம்பிக்கையுடன் சிம்சுபா மரத்தில் மறைந்திருக்கிறான் அனுமன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers