Monday, December 30, 2019

சுந்தர காண்டம் - 35 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

அனுமன் சீதாப்பிராட்டியைக் கூர்ந்து கவனிக்கிறான். இராமபிரான் சொன்ன அடையாளங்களைக் கொண்டு இவர் சீதாப்பிராட்டி என ஊகித்து, மன அமைதி கொள்கிறான்.


‘எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன் உரையோடு மாறு கொண்டில,

அவள் எந்தெந்த அணிகலன்களை அணிந்து கொண்டிருந்தாளோ அவைகள் மரங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன; அவைகளை அணிந்த அடையாளம் அவரது கைகளில் தெரிகின்றன.

மேலாடை மஞ்சள் நிறமாயிருக்கிறது; இராவணேசுவரன் அவரை அபகரித்து எடுத்துச் சென்ற போது, ஓர் ஓரத்தைக் கிழித்து, அணிகலன்களை அதில் வைத்துக் கட்டி, கீழே வீசிய துணியும் மஞ்சள் நிறம்தான். நெடுநாட்கள் ஒரே ஆடையை அணிந்திருப்பதால் நிறம் மங்கியிருக்கிறது.

எந்தெந்த அணிகலன்களைக் கழற்றி அன்று எறிந்தாளோ அவைகள் இன்று இங்கு இல்லை; மற்றும் நான் அன்று யாரைப் பார்த்தேனே அவருக்கும் இவருக்கும் பேதம் எதுவுமில்லை.

மண்டோதரியைக் கண்ட அனுமன் நிலையை இப்போது கம்பநாடன் கொணர்கிறான். சீதாப்பிராட்டியைக் கண்டு கொண்ட அனுமன்

ஆடினன், பாடினன், ஆண்டும் ஈண்டும் பாய்ந்து,
ஓடினன்; உலாவினன் - உவகைத் தேன் உண்டான்.

என் வணக்குத்துக்குரிய, போற்றுதலுக்குரிய பிராட்டியைக் கண்டுகொண்டேன்; அறம் என்றும் அழியாது; நானும் அழிய மாட்டேன் என்கிறான் அனுமன்.

தேடினேன் கண்டெனென் தேவியை!
வீடினது அன்று அறன்; நானும் வீகலேன்.

இலக்குமி தேவியே சீதாப்பிராட்டியாய் அவதரித்தவர்; அவரைக் காணாது துவண்ட அனுமன் கூறியது 'வீடுவேன்' (இறப்பேன்); ஆயின் சீதாப்பிராட்டியைக் கண்டவுடனேயே, நம்பிக்கை வளர்ந்து, 'வீகலேன்' (இறவேன்) என்கிறான் அனுமன்.

ஆக, தேவியைக் கருத்தில் கொள்வோர்க்கு என்றும் அழிவில்லை எனக் கொள்ளலாம்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers