Friday, December 13, 2019

சுந்தர காண்டம் - 17 - புஷ்பக விமானம்

இராவணேசுவரன் மாளிகையில் ஓரிடத்தில் கண்ணைப் பறிக்கும் வாகனம் ஒன்று நிற்பதைக் காண்கிறான் அனுமன். குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம், அன்னப்பறவைகள் சுமந்து செல்வது போல உருவாகியிருக்கிறது. இருபுறங்களிலும் வரைந்துள்ள இயற்கைக் காட்சிகள் தேரை மேகங்களிடையே பறந்து செல்லும் வாகனம் போல் தோற்றுவிக்கின்றன.

வானத்தில் மேகங்கள். தொலைவில் மலை. மலை மீது வெண்ணிற மாளிகைகள் கொண்ட ஓவியத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கண்டு வியக்கிறான் அனுமன்.

புஷ்பக விமானம் விடாப்பிடியான தவத்தாலும், பராக்கிரமத்தாலும் வெற்றி கொள்ளப்பட்டது. ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு மிகவும் உயரமாய் இருக்கிறது.

மனம் விரும்பியபடி விரைவாய்ச் செல்லக் கூடியது; பிறரால் அடக்க முடியாதது; புண்ணிய செய்த, புகழ் பெற்ற உயர்ந்த குணங்கள் கொண்ட முனிகளால் அடையப்படும் சொர்க்கத்தைப் போன்று, எல்லா சுக போகங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கிறது புஷ்பக விமானம்.

இலங்காபுரியின் பேரெழிலில் லயித்திருந்தாலும் இடையிடையே கவலை எட்டிப் பார்க்கிறது அனுமனுக்கு.

நிகரில்லாத அழகி, அறநெறி தவறாத குலத்தில் தோன்றியவள், நல்ல இடத்தில் வளர்ந்து பூத்த பூங்கொடி, மெலிந்த உடலமைப்பு கொண்டவள், இராமபிரானையே நினைத்துக் கொண்டிருப்பவள், இனிய குரலை உடையவள், அழுக்குப் படிந்த தங்கச்சிலை போன்றவள், புண்ணான இடத்தில் செலுத்தப்பட்ட பாணம் போன்றும் இருக்கும் சீதாப் பிராட்டியை வெகு நேரம் தேடியும் அனுமனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இராவணேசுவரன் பேராற்றலால் ஆளப்பட்ட இலங்காபுரி முழுவதும் அலைந்து தேடியும், கணவரின் நற்குணங்களால் வெற்றி கொள்ளப்பட்டவளும், கொண்டாடத் தக்கவளும் ஆன சீதாப்பிராட்டியைக் காணாததால் கவலை கொள்கிறான் அனுமன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers