Sunday, December 15, 2019

சுந்தர காண்டம் - 21 - தேடுதல் தொடர்கிறது

ஆடிப் பாடி விளையாடிக் களைத்து உறங்குகின்ற பெண்கள் பல விகாரங்களில் அனுமனுக்குத் தென்படுகின்றனர். அரைகுறையாய்த் தின்று வைத்த உணவுகளும், குடித்து மிகுந்த பானங்களும் கிடக்கின்றன.

அனுமனுக்குத் திடீரெனச் சந்தேகமும், அருவருப்பும் உண்டாகிறது.

'பெண்களை இப்படி உற்றுப் பார்த்ததினால் என்னுடைய பிரம்மசர்யத்திற்குக் குறைவு நேராதா?'

'எத்தனைப் பெண்களைப் பார்த்தேன்? எந்தெந்த நிலைகளில் பார்த்தேன்? இது தவறுதானே?' என நோகிறான்.

அவனே, 'புண்ணிய மற்றும் பாவ காரியங்களைச் செய்யப் புலன்களைத் தூண்டுவது மனம்தானே?

ஆனால், என் மனதில் காமம் என்கிற உணர்வு எழவில்லையே? சீதாப்பிராட்டியை வேறு இடத்தில் தேட முடியாது; பெண்களை, பெண்கள் இருக்குமிடத்தில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.

காணாமல் போன பெண்ணை, பெண் மான்கள் கூட்டத்தில் தேட முடியாது' என்று தனக்குத் தானே சமாதானம் கொள்கிறான்.

மனோஹி ஹேதுஸ்ஸர்வேஷாம் இந்த்ரியாணாம் ப்ரவர்த்தனே......
ந சக்யா ப்ரமதா நஷ்டா ம்ருகீஷு பரிமார்கிதும்

வான்மீகி முனிவர் அருளிய சுந்தர காண்ட ஸர்க்கங்கள் 9, 10, 11-ஐ முறையாக ஓதி வருதல் நம் (அநாவசிய) காம(ஆசை)த்தை அடக்கும் என்பது பெரியோர் வாக்கு.

எங்கு பார்த்தாலும் ஆட்டம், பாட்டம், கேளிக்கை, கூத்துதான். ஆனால், கவலைப்படுவார் ஒருவரும் தென்படவில்லை என்று கம்பநாடனுடைய அனுமன் கூறுவான்.

அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர்
பாடுநர் ஆகிக்,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார்
ஒருவரைக் காணேன்!

அத்தகைய கவலை தோய்ந்த முகத்தைத் தானே தேடி அலைகிறான் அனுமன் இப்போது!

முதன்முதலாய் அனுமனின் உற்சாக நிலை தொலைந்து, சுயபச்சாதாபமும், சோர்வும் பற்றிக் கொள்கிறது.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers