Monday, December 02, 2019

சுந்தர காண்டம் - 6 - ததோ ராவண நீதாயா:

சுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கத்தின் முதல் சுலோகம்

ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஸத்ரு கர்ஸந: |
இயேஷ பதமந் வேஷ்ட்டும் சாரணா சரிதே பதி ||

பொருள்:

இராமபிரான் பணி வெற்றியடைய வேண்டும் எனபதற்காக ஜாம்பவானால் தூண்டப்பட்ட, எதிர்களை அழிக்கும் வல்லமை பொருந்திய அனுமன், ராவணனால் அபகரிக்கப்பட்ட சீதாப் பிராட்டியைக் காண, சாரணர்கள் செல்லும் ஆகாயத்தில் செல்ல விரும்பினார்.

இதற்குப் பலப்பல அர்த்தங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் உன்னிப்பாய்க் கவனித்து விட்டு மேலே போகலாம்.

ராவண நீதாயா: ஸீதாயா: - ராவணேசுவரனால் அபகரிக்கப்பட்ட, அல்லது கொண்டு செல்லப்பட்ட, சீதாப் பிராட்டி என்கிற பொருளைக் கொள்ளுமாறு வான்மீகி முனிவர் அமைத்திருக்கிறார்.

ஆக, சீதாப்பிராட்டியின் தெய்வீகத் தன்மை (ஸாத்வீகம்) அக்னியிடத்தில் இருந்தது என்றும், மனிதத் தன்மை (ராஜஸம்) மஹாவிஷ்ணுவின் வலது திருக்கரத்தை எப்போதும் அலங்கரித்தது என்றும், அழிக்கும் தன்மை (தாமஸம்)யைத்தான் ராவணேசுவரன் கவர்ந்து போனான் என்பதை 'ராவண நீதாயா: ஸீதாயா:' என்பதன் மூலமாய் வான்மீகி முனிவர் அருளினார்.

இத்தெய்வீகத்தன்மையை மீட்க, இராமபிரான் 'அக்னிப் பிரவேச' நாடகத்தை நடத்த வேண்டியிருந்தது சுவராஸ்யம்.

அழிக்கும் தன்மை கொண்டதால்தான், இராவணேசுவரனால் சீதாப் பிராட்டியின் கை பிடித்து, கவர்ந்து செல்ல முடிந்தது. இப்படித்தான் வான்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆயின், கம்பன் படைத்த சீதாப் பிராட்டி 'கற்பின் கனலி'யாதலால், அவளைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போகிறானாம்.

வான்மீகி முனிவர் இவ்வாறு அருளியதற்குக் கிருஷ்ண்ப் ப்ரேமி ஸ்வாமிகள் மிக அழகாய்க் காரணம் சொல்லுவார். 'உன்னை என்னால் ஒரு நொடியில் அழித்து விட முடியும். ஆனால், இராமபிரானால் கொல்லப்பட்டால்தான் எனக்குப் பெருமை. அதனால், உன்னைச் சும்மா விடுகிறேன்' எனப் பொறுமையாய்ச் சீதாப் பிராட்டி இராவணேசுவரனுக்குப் போதிப்பதைப் பொருத்திப் பாருங்கள் என்பார்.

அழிக்கும் தன்மை கொண்டது ஒருநாள் அழியத்தான் வேண்டும்; அதற்கு முன் கரையேற இறைவனைச் சரணடையத்தான் வேண்டும்.

அதைச் செய்ய ஒரு தூண்டுகோல் வேண்டும். அதைத்தான் அனுமன் செவ்வனே சுந்தர காண்டத்தில் செய்கிறான்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers