Tuesday, December 03, 2019

சுந்தர காண்டம் - 7 - வல் வில் ராமனே துணை

சுந்தர காண்டம் எதனால் மற்ற காண்டங்களிலிருந்து உயர்ந்து, பாராயண முறையில் முதன்மையாய் நிற்கிறது?

சீதாப் பிராட்டியை நம் ஆன்மா (ஜீவன்)வுக்குப் பொருத்திக் கொள்வோம்; சீதாப்பிராட்டி சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை, வசிக்கும் ராக்ஷஸர்கள், அவர்களின் தலைவன் இராவணேசுவரன் - ஸம்ஸார ஸாகரம், லௌகீக விஷயங்கள், நமது ஐம்புலன்களுக்குப் பொருத்திக் கொள்வோம்.

இவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, துக்கப்பட்டு, கரை சேர மாட்டோமா, இறைவனை அடைய மாட்டோமா என ஒரு ஆன்மா துடிக்கிறது; துடிக்கக் கூடும். எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிட்டி விடாது; அப்படிக் கிட்ட, நமக்குப் பூர்வ ஜன்ம பலன் இருக்க வேண்டும்.

இப்படித் துக்கப்படும் ஜீவன் (எ) ஆன்மாவைக் கண்ட, பரம கருணை கொண்ட இறைவன், அதைத் தேடிச் சென்று தன்னிடம் இணைத்துக் கொள்ள ஆச்சார்யனை அனுப்புகிறான்.

ஆச்சார்யனின் தரிசனம் ஜீவனுக்குக் கிடைத்தது, இறைவனுடைய அளவற்ற கருணையை ஆச்சாரியன் ஜீவனுக்கு உபதேசித்தது, தன்னைக் காப்பாற்றுவான் இறைவன் என ஜீவன் தைரியம் கொண்டது, தன் நிலைமை, தன் சோகத்தை ஆச்சாரியன் மூலமாய் இறைவனுக்குத் தெரிவித்துக் கொண்டது, ஆச்சாரியன் ஜீவனின் விண்ணப்பத்தை இறைவனிடம் சேர்த்ததைத்தான் சுந்தர காண்டம் சொல்கிறது.

உலக மாயைகளில் இருந்து நம்மைத் திருப்பி, அஞ்ஞானம் விலக்கி, ஞானம் தந்து, முக்தி அடைவதற்கான விதை சுந்தர காண்டத்தில் விதைக்கப்பட்டது. ஆகையால்தான், இது சுந்தர காண்டமெனத் தகும்.

இதைத்தான் கம்பநாடனும் சுந்தர காண்டத்தின் துவக்கத்தில், கடவுள் வாழ்த்தாய் அருளுகிறான்.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவெனப், பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா(டு) உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்?
அவர் என்ப கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே;
மறைகளுக்(கு) இறுதி ஆவார்.

மாலைக் காலத்தில், வழியில் நெளிந்து கிடக்கும் கயிறானது, பாம்பின் உருவமாய்க் காணப்பட்டுப் பார்ப்போரையெல்லாம் பயங் கொள்ளச் செய்வது போல,
ஐம்புலன்களின் இயல்பாகிய இவ்வுலகம் மாயையால் மூடப்பட்டுப் பரம்பொருளை அறியாதவாறு செய்து விடுகிறது.

யாரைக் கண்டால் இது நீங்கும்? வேதங்களின் முடிவில் கூறப்படும் பரம்பொருள், இலங்கையை அழிக்க வந்த - கைகளில் கோதண்டம் ஏந்திய - இராமபிரான்-ஆல் நீங்கும்.

வான்மீகி வழியில் வந்த கம்பநாடன், சுந்தர காண்டத்தின் சாரத்தை கடவுள் வாழ்த்தாய் அருளியதில் ஆச்சரியமில்லைதான்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers