Saturday, December 28, 2019

சுந்தர காண்டம் - 33 - கண்டான் சீதாப்பிராட்டியை! (தொடர்ச்சி)

இராமபிரான் சொன்ன அடையாளங்களை வைத்து இவர்தான் சீதாப்பிராட்டி என்று ஊகிக்கிறான் அனுமன். ஆனால், அதை எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது? அவர் படும் துயரங்கண்டு அவரே சீதாப்பிராட்டி என்று நிச்சயிக்கிறான் அனுமன். துயரமே பேரடையாளம்!


து:க்கேன புபுதே ஸீதாம் ஹனுமான் அனலங்க்ருதாம் |
ஸம்ஸ்காரேண யதாஹீனாம் வாசம் அர்த்தாந்தரம் கதாம் ||

முன்பு அழகை ஒரு அடையாளமாய் வைத்து மண்டோதரியைப் பார்த்தவுடன் சீதாப்பிராட்டி எனக் கொண்ட அனுமன், இப்போது காரணம் கொண்டு துயர் வடியும் பெண்ணே சீதாப்பிராட்டி எனக் கொள்கிறான்.

பதினைந்து ஸர்க்கங்களுக்கும் சிகரமாய் விளங்கும் ஸ்லோகம் இது எனக் கொள்ளலாம். 'து:க்கேன என்ற சொல்லுக்கு 'சிரமப்பட்டு' என்கிற அர்த்தமும் உண்டு.

இரண்டாவது வரியையும் சேர்த்துப் படித்தால், 'அர்த்தம் சிதைந்து, குலைந்து மாறுபட்டு இருக்கும் சொல்லைப் புரிந்து கொள்வது போல சிரமப்பட்டுப் புரிந்து கொண்டான் சீதாப்பிராட்டியை' என்று பொருள்படும்.

'இராமபிரான் வந்துதான் என்ன பயன்?' என்கிற அளவிற்குப் படைபலம், காற்றுப் புகமுடியாத காவல், தேவலோகம் ஒத்த வியக்கத்தக்க செல்வம், காதல் புரியும் அரம்பையர் போன்ற மகளிர், கண்களை மயக்கும் அழகு கொண்ட அசோக வனம், இவைகளையெல்லாம் சுவையோடு, ரசனையோடும் வான்மீகி முனிவர், கம்பநாடன் வர்ணித்தது எதற்காக?

சீதாப்பிராட்டியின் சோகத்தை எடுத்துக் காட்டும் நோக்கத்தோடுதான்.

இத்தகைய திரண்ட செல்வத்தைப் புறக்கணித்து, இராமபிரான் பிரிவின் சோகம்.

இத்தகைய காவலைக் கண்டு அச்சமுறாத சோகம்.

இத்தகைய உல்லாசமான சூழலில் தனித்து நிற்கும் சோகம்.

சிறை வைத்த இடமோ அ-சோக-வனம்!  

No comments:

முந்தைய பதிவுகள்

Followers