Thursday, December 12, 2019

சுந்தர காண்டம் - 16 - இராவணேசுவரன் மாளிகையில் புகுதல்

இலங்காபுரிக்கு உயர்ந்த ஆபரணமாய் விளங்கும் இராவணேசுவரன் மாளிகையை அனுமன் சுற்றி வருகிறான்.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குத் தாவிச் செல்வது, ராக்ஷஸர்களின் தோட்டங்களைப் பார்வையிடுவது, அச்சமில்லாமல் உப்பரிகைகளில் நடந்த செல்வது - செயல்களைச் செய்கிறான் அனுமன்.

யாருடைய வீட்டில் புகுந்து தேடுகிறான்?

பிரஹஸ்தன், மகாபார்ஸ்வன், கும்பகருணன், விபீஷணன், மகோதரன், வித்யுஜ்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி, ரச்மிகேது, சூர்யசத்ரு, வஜ்ரகாயன், தூம்ராக்ஷன், ஸம்பாதி, வித்யுத்ரூபன், பீமன், கனன், விகனன், சுகநாஸன், வக்ரன், சடன், விகடன், ஹ்ரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமசன், யுத்தோன்மத்தன், மத்தன், த்விஜக்ரீவன், இந்த்ரஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராளன், பிசாசன், சோணிதாக்ஷன் வீடுகளுக்குச் சென்று, அந்தந்த வீடுகளின் செழிப்பையும், செல்வக் கொழிப்பையும் பார்க்கிறான் அனுமன்.

வான்மீகி முனிவர் அனுமன் கும்பகருணனைப் பார்த்தான் என்பதோடு நிறுத்திவிடுகிறார். ஆயின், கம்பநாடன் அப்படியில்லை.

12 பாடல்கள் அனுமன் - கும்பகர்ணன் பார்த்ததற்கு அருளியிருக்கிறான். ராவணன் என நினைத்து முதலில் சினம் கொண்டு, பின் தணிந்து,  பள்ளியறையைக் கடந்து செல்கிறானாம் அனுமன்.

அனுமன் தன் சினத்தை எப்படித் தணித்துக் கொள்கிறான்?

மறுகி ஏறியமுனிவு
எனும் வடவைவெங் கனலை
அறிவு எனும்பெரும் பரவை
அம் புனலினால், அவித்தான்.

(சீதாப் பிராட்டியைக்) காணாது கலங்கி நின்ற நிலையில், மேலும் மேலும் பெருகி வருகின்ற கோபம் என்கிற கொடிய ஊழித்தீயை, ஞானம் (அறிவு) என்கிற பெருமையுடைய கடல் நீரால் அணைத்தானாம்.

1. வடவை வெங்கனல் - கொடிய ஊழித் தீ.
2. பெரும் அம் பரவை அம்புனல் - பெருமையுடைய கடல் நீர்.

நமக்கும் இதில் சேதி இருப்பதாய் நான் நிச்சயம் நம்புகிறேன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers