Tuesday, December 10, 2019

சுந்தர காண்டம் - 14 - இலங்காபுரியின் எழில்

எதிரிகளின் தலையில் கால் வைப்பது போல, தன் இடது காலை முன் வைத்து, வாயிற்படி இல்லாத இடத்தில் மதில் சுவரைத் தாண்டுகிறான் அனுமன்.

ஊருக்குள் நுழைந்து வீடு வீடாய்ப் பார்க்கையில், இலங்காபுரி இன்னும் அழகாய்த் தோன்றுகிறது. எங்கும் நாதம் நிறைந்த கீதம். பாடும் பெண்கள் அப்ஸரஸ்களைப் போலிருக்கிறார்கள். பிரபுக்களின் மாளிகையில், படியேறி நடந்து செல்லும் பெண்கள் இடுப்பில் கட்டிய சலங்கை நூலும், காலில் அணிந்த தண்டையும் சேர்ந்து ஒலிக்கின்றனவாம். இடையே கைகொட்டி ஆமோதிக்கும் ஆடவரின் குரல்.

சுச்ராவ மதுரம் கீதம் த்ரிஸ்தான ஸ்வரபூஷிதம் ஸ்த்ரீணாம் மதஸம்ருத்தானாம் திவிச அப்ஸரஸாம் இவ

தூரத்தில் மந்திரம் ஓதும் தொனி, அங்குள்ள மறையோர்கள், ராவணன் புகழ் பாடும் அரக்கர்கள் செய்யும் பயிற்சிகளைப் பார்க்கிறான் அனுமன்.

ஸ்வாத்யாய நிரதாம்ஸ்சைவ யாதுதானான் ததர்ச ஸ:
ராவணஸ்தவ ஸம்யுக்தான் கர்ஜதோ ராக்ஷஸானபி

வான்மீகி முனிவர்க்குச் சளைத்தவனா கம்ப நாடன்?

குழலும், வீணையும், யாழும், என்று
இனையன குழைய,
மழலை மென்மொழி கிளிக்கு இருந்து
அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடும் தடமணிச்
சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை
தரெிவரு நிலைய!

மாளிகையில் நின்று கிளியோடு கொஞ்சும் மகளிர், குழல், யாழ், வீணை-யை விட இனிய குரலில் பேசுகின்றனர். அந்தந்த வீடுகளில், சுவர்களிடையே பதிக்கப்பட்ட மணிகளும், கண்ணாடிகளும் அவர்களின் உருவைப் பிரதிபலிப்பதால், எது நிழல் (பிம்பம்), எது நிஜம் (பெண்) என்றறிவதே கடினமாயிருக்கிறதாம் அனுமனுக்கு.

ராஜ வீதியில் நுழையும் அனுமனுக்கு அரக்கர்களின் காவலே அரணாய்க் கொண்ட, இராவணேசுவரனின் மாளிகையில், நிறைந்து நிற்கும் ரதங்கள், குதிரைகள், யானைகள், உவகைமிக்க மங்கையர், மிருதங்க சப்தம், சங்கநாதம், முரசொலி பிரமிப்பைத் தருகிறது.

கடலைப் போலக் கம்பீரம், கடலைப் போன்ற அமைதி, இலங்காபுரிக்கே ஒரு அணிகலன் போல அமைந்திருக்கிறது இராவணேசுவரனின் மாளிகை.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers