Saturday, December 21, 2019

சுந்தர காண்டம் - 27 - நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

'உயிர் உள்ளவரைதான் நம்பிக்கை இருக்கும்' என்கிற பொருளுக்கேற்ப, அனுமன் தன்னைத் தேற்றிக் கொண்டு, மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்கும்போது...

கள் உறையும் மலர்ச்சோலை
அயல் ஒன்று கண்ணுற்றான்.

என்று கம்பநாடனும்,

அஸோகவநிகா சேயம் த்ருஸ்யதே

என்று வான்மீகி முனிவரும் அருளிய அசோகவனம் தென்படுகிறது. மனதில் தெம்பும் பிறக்கிறது.

மாடு நின்ற அம் மணிமலர்ச்
சோலையை மருவித்
‘தேடி அவ் வழிக் காண்பெனேல்
தீரும் என் சிறுமை;

பக்கத்தில் நிமிர்ந்துள்ள அழகிய மலர்கள் மலர்ந்துள்ள சோலையை (வனத்தை) அடைந்து, சீதாபிராட்டியைத் தேடி கண்டு கொண்டேன் எனில் என் துன்பம் தீர்ந்தே போகும் என்று நினைக்கிறான் அனுமன்.

'அஷ்ட வசுக்கள், மஹா ருத்ரர்கள், அச்வினீ தேவதைகளை வணங்குகிறேன். அரக்கர்களின் துயர் பெருக வேண்டி, இவ்வனத்துள் நுழையப் போகிறேன்.'

'எல்லா அரக்கர்களையும் வென்று, இஷ்வாகு குலத்திற்கு அதிகமாய் இன்பத்தை அருளும் சீதாப்பிராட்டியை - தவம் செய்தவரிடம், தவத்தால் மகிழ்ந்த இறைவன், அத்தவத்தின் பலனைக் கொடுப்பது போல - இராமபிரானிடம் சேர்க்கப் போகிறேன்.'

அனுமன் ஆழ்ந்து சிந்திக்கும்போது, தான் செய்த தவறை - மகேந்திர மலையில் இருந்து புறப்பட்டபோதும் இராமபிரான் உட்பட யாரையும் வணங்காததுதான் இந்நிலைக்குக் காரணம் - உணர்ந்து, மனப்பூர்வமாகவும், பணிவாகவும் தன் வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றான்.

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்யை ஜனகாத் மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமா நிலேப்ய
நமோஸ்து சந்த்ரார்க்க மருத் கணேப்ய: ||

'இராமபிரான், இலக்குவன், சனகனின் மகளான சீதாப்பிராட்டி, சிவபெருமான், இந்திரன், யமதர்மராஜா, வாயு, சூரியன், சந்திரன், மருத் கணங்களுக்குப் பணிவான வணக்கங்களை அனுமன் தெரிவித்தான்' என்று வான்மீகி முனிவர் கூறுவார்.

இந்தச் சுலோகத்தைத் தினமும் படித்தல் நமக்கு நன்மை பயக்கும்; முக்கியமாய், நாம் எதையேனும் தொலைத்து விட்டு, தேடிக் கிடைக்காது போனால், இதைச் சொன்னால் அனுமனுக்குச் சீதாப்பிராட்டியின் தரிசனம் கிட்டியது போல நமக்கு அப்பொருள் கிடைத்து விடும் என்கிறான் என் நண்பன் Ganapathy Subramanian Sundaram.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers