பக்தி க·பே

சொல்லடி சிவசக்தி! இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ?

Friday, December 25, 2009

இறைவன் வாழும் நகரம்

உபநிஷதம் உடம்பை ஆன்மாவின் கருவியாகக் கூறுகிறது. உடம்பை எப்படிப் பேண வேண்டும் என்பதற்கு மந்திரங்கள் வழி காட்டுகின்றன. உடம்பை ஒரு போதும் வெறுக்கவோ, ஒரு தடையாகவோ கருதக் கூடாது. ஆன்மாவை உணர்வதற்காக இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கருவியே உடம்பு என்ற எண்ணம் வேண்டும்.

இந்த உடம்பு பதினோரு வாசல்களை உடைய ஒரு நகரம் (புரம்) என்று கூறப்படுகிறது. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம் மற்றும் பிரம்மரந்திரம் (பிரம்மரந்திரம் என்பது உச்சந் தலையிலுள்ள உள்ள ஒரு நுண்ணிய துவாரம். சாதாரண கண்களுக்குப் புலப்படாதது. யோகிகள் மரண வேளையில் இதன் வழியாகத் தங்கள் பிராணனை(உயிரை) விடுவார்கள் என்று கூறப்படுகிறது) கியவை பதினோரு வாசல்கள்.

உடம்பை ஒரு நகரமாகக் கூறுவது எண்ணிப்பார்க்கத் தக்கது. ஒரு நகரத்தில் நடைபெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் உடம்பில் நிகழ்வதை இன்றைய உடலியல் துணையால் நாம் நன்றாக அறிய முடியும். சமுதாய வாழ்க்கை, கல்வி, கோயில், போக்குவரத்து, நதிகள், உணவு உற்பத்தி, சுத்திகரிப்பு, கழிவை வெளியேற்றுதல், காவல் என்று ஒன்றுவிடாமல் எல்லா துறைகளும் உடம்பினுள் உள்ளன. நமது முனிவர்கள் விஞ்ஞானத்தின் துணையின்றி அன்றே இதனை உணர்ந்து கூறியிருப்பது வியக்கத்தக்கது. சாந்தோக்ய உபநிஷதம் உடம்பை வெறும் நகரம் என்று கூறாமல் 'இறைவன் வாழும் நகரம்' (ப்ரஹ்ம புரம்) என்று கூறுகிறது.

-கட உபநிஷதம்(மரணத்திற்குப் பின்னால்), சுவாமி சுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பு

Tuesday, December 22, 2009

ஆத்ம சிரேயஸ்

தன்னம்பிக்கை என்பதை பணம் எத்தனை தூரம் தந்து துக்கத்தைக் குறைக்கும்? குறைப்பதாவது! அப்படி நினைத்தால் அது தப்பு. துக்கத்தை ஜாஸ்தியாக்குவதற்கென்றே படைக்கப்பட்டது அது.

ஒவ்வொரு பணக்காரனுக்கு, தன்னைவிடப் பணம் படைத்த ஒருத்தனைப் போல் தானும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆடம்பரத்துக்கும், டாம்பீகத்துக்கும் செலவழித்துக் கடன்படுகிறான். உலகத்தில் பணக்காரனுக்குத்தான் ஜாஸ்திக் கடன் இருக்கிறது. இது விசித்திரமாக, வேடிக்கையாகத் தோன்றினாலும், வாஸ்தவ நிலை இதுதான்.

'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று திருவள்ளுவரே சொல்லிவிட்டார். ஆனாலும் அவசியமில்லாமல் ஏராளமாய்ச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காக்கிற மாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் ரொம்பப் பிசகு. சோற்றுச் செலவை விட ஜாஸ்தியாகும் காபியை நிறுத்துவது, பட்டுத் துணிகள் வேண்டாம் என்று விடுவது, ஹோட்டல் செலவை அடியோடு குறைப்பது, சினிமா, டிராமாச் செலவுகளைக் குறைப்பது என்கிற நாலை மட்டும் செய்தாலே போதும். இதெல்லாம் ஒரு குடும்பத்தின் தினப்படி ஸமாசாரங்கள். இவற்றோடு சமூகப் பிரச்னையாகிவிட்ட வரதக்ஷ¢ணையையும், ஆடம்பரக் கல்யாணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்ரவம் ஏற்படவே ஏற்படாது. எது இன்றியமையாதது, எதெது இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்த முடியும் என்று தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழப் பழக வேண்டும். எளிய வாழ்க்கையில் எவ்வளவு நிம்மதி இருக்கிறதென்று அப்புறம்தான் புரியும்.

போக வஸ்துக்களைச் சேர்த்துக் கொண்டே போனால், வீடு பெரிசாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. மோட்டார் சைகிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் இன்னம் பெரிசாக வேணும். அதையே ஏர் கண்டிஷன் பண்ணனும் என்கிறது போல, ஒன்றுக்கு மேல் ஒன்று சௌகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருந்தால், எப்போது பார்த்தாலும் அதிருப்திதான். மனஸ¤ அசௌகரியத்தில்தான் இருக்கும். சொந்தச் செலவுகளை அதம பட்சமாக்கிக்கொண்டு, தான தருமங்கள் என்று இல்லாதவர்களுக்குப் பண்ணும்போது, நமக்கு புண்ணிய 'வரவு'தான் அதிகமாகிறது. தனக்கென்று செலவழிக்கும்போது பெற முடியாத ஆத்ம சிரேயஸை, இதனால்தான் பெற முடியும்.

ஆத்ம சிரேயஸை கொடுக்க முடியாத பணம் எத்தனை இருந்தாலும் பூஜ்யம்தான். ஆத்ம சிரேயஸ் இல்லாத இடத்தில் ஆத்ம திருப்தி ஏது? திருப்தி இல்லாத இடத்தில் நம்பிக்கை ஏது?

-காஞ்சி பெரியவர்

Saturday, December 19, 2009

ஓம்!




பழனியில் நாங்கள் தங்கியிருந்த 'ஷண்முகானந்தா லாட்ஜ்' நுழைவாயிலில் எங்களை வரவேற்ற முருகன் இவர்தான்.

கந்தரை, இந்நிலையில், இதுவரை பார்த்திராததால், சொக்கியிழுத்ததில், கவர்ந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

குழந்தை முகம்; அழகு முகம்; சாந்த முகம்; அருள் முகம்; நீறு முகம்; ஆறு முகம். வனத்தின் நடுவே அமைதியாய் அமர்ந்திருக்கும் சரவணனின் பின்னே உறுத்தாத ஒளிவட்டம் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

இளங்கையில் இளகிய வேல் (இறுக்கமாய்ப் பிடிக்காதது நோக்கத் தக்கது); மயிலை அணைத்தபடி, மயிலோ பாம்பை அணைத்தபடி, பாம்போ படமெடுத்து இளவலை வேண்டுகிறது.

அங்கங்களுக்குரிய ஆபரணங்கள் அளவாகவும், கச்சிதமாயும் அமைக்கப்பெற்றிருப்பது இன்னொரு ஆச்சர்யம்.

மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிங்கார வேலனின் தோற்றம் எனக்கு 'தக்ஷ¢ணாமூர்த்தி'யை நினைவூட்டுவது வியப்பில்லை; 'அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையன்' ஆயிற்றே?!

Wednesday, December 16, 2009

திருவடி!


கம்பராமாயணத்திலே சொல்கிறார்- 'இன்றைக்குத்தானே வந்தான். இத்தனை நாளாக வரவில்லையே' என்று எங்காவது உண்டா...? இல்லவே இல்லை. பகவான் அந்தக் கணக்கெல்லாம் பார்ப்பதில்லை. வருகிறவன் அக்கிரமங்கள் பல பண்ணி விட்டு வரட்டுமே...அப்பா அம்மாவையே கொன்று குவித்துவிட்டு வரட்டுமே...அவன் அப்படி வந்தானே என்று பாராமல், 'இன்றைக்கு வந்திருக்கிறான்; பாவத்தையே பண்ணிவிட்டு வந்திருக்கிறான், இன்றைக்காவது வந்தானே!' என்று பரமாத்மா சந்தோஷப்பட்டு அனுக்கிரஹம் பண்ணுகிறார்.

பாவம் மொத்தத்துக்கும் பரிகாரம் பண்ணி முடித்துவிட்டு பிறகு நாம் பகவானிடத்தில் போவது என்றால் அது எப்போது சாத்தியப்படும்! அலை எப்போது ஓய்வது? நாம் எப்போது சமுத்திர ஸ்நானம் செய்வது!

அதனால் நாம் விரைந்து பகவான் திருவடியைப் பற்ற வேண்டும். பற்றிய கணமே ஆட்கொள்வான். அப்போது நெல் செய்ய புல் தேயுமாப் போலே, நம் பாவங்களும் தாமே விலகும்.

'நெல் செய்ய...' என்றால்? நெல்லைப் பயிரிட்டால் அந்த இடத்தில் புல் முளைப்பது தானாக நின்று போய்விடும். மீண்டும் விளையாது. அந்த மாதிரிதான் பகவான் திருவடியை நாம் பற்ற, பாபங்கள் விலகும்.

-இது மந்திர பூர்வமாக உபநிஷத்தில் இருக்கிறது. இதுவே 'விச்வம் விஷ்ணுர் வஷ்ட்காரோ' என்று ஆரம்பித்து, 'பூதாத்மா பூத பாவன:' என்பது வரையிலே விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் சொல்லப்படுகிறது.

பரப்ரும்மம்! அதைப் போன்று மற்றொன்று இல்லாததனாலே சர்வசராசங்களுக்குள்ளேயும் இருக்கிறது. அதனால், மகான்களுக்கெல்லாம் எந்த வஸ்துவிலும் உள்ளே இருக்கிற பகவாந்தான் புலனாவான். அஞ்ஞானிகளான நமக்குத்தான் வெளி வஸ்துக்கள் மட்டும் தெரியும்.

-குறையொன்றுமில்லை, நான்காம் பாகம், முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார், வானதி பதிப்பகம்

ஹனுமத் ஜயந்தி (16-12-2009)



और देवता चित्ता न धरई
हनुमत सेइ सर्व सुख करई


ஔர் தேவதா சித்த ந தரயீ
ஹனுமத் ஸேயி ஸர்வ ஸ¤க கரயீ


-ஹனுமான் சாலீஸ் (35)

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும்
மனதைச் செலுத்தாத ஒருவனுக்கு,
எல்லா இன்பங்களும் நிறைகின்றன
.

Saturday, December 12, 2009

கீதோபதேசம்!

கீதை உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா, ஒரு தடவை மகானைத் தரிசிக்கக் காஞ்சிக்குச் சென்றார். தன் அருமை பெருமைகளை மகானிடம் பவ்யமாகச் சொன்ன அவர், பெரியவா சொல்லும் இடங்களுக்குச் சென்று பிரவசனம் செய்ய, தான் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

‘சென்னை கோபாலபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் உபன்யாசம் செய்!” என்பது பெரியவா உத்தரவு. அவரும் காஞ்சி மஹா பெரியவரின் உத்தரவை ஏற்று அந்தக் கோயிலுக்குப் போய்த் தனது சொற்பொழிவை ஆரம்பித்தார்.

முதல் நாள் பத்துப் பேர் கதை கேட்க வந்திருந்தனர். அடுத்த நாள் ஐந்தே பேர். மூன்றாம் நாள் மூவர் மட்டும் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். உபன்யாசருக்கு ‘சப்’பென்று போய்விட்டது. ‘கீதோபதேசத்தைக் கேட்க மக்கள் விரும்பவில்லையா? இல்லை, தனது விளக்கங்கள் சரியாக இல்லையா?’ – நேராக மகானிடம் போய் நடந்ததைச் சொன்னார்.

காஞ்சி மஹா பெரியவரின் முகத்தில் லேசாகப் புன்முறுவல். பிறகு நிதானமாய்ச் சொன்னார்: “கீதையை நீ சொல்லும்போது மூன்று பேராவது இருந்தார்களே என்று சந்தோஷப்படு. ஏனெனில் பரமாத்மா கண்ணன், கீதையைச் சொல்லும்போது அதைக் கேட்க அர்ச்சுனன் ஒருவன்தானே எதிரில் இருந்தான்?” என்றாரே பார்க்க வேண்டும்!

Thursday, December 10, 2009

மீன் விழிகள்!

மீன் ஏன் எப்போதும் ஜலத்தின் மேல்மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக் கொண்டிருக்கிறது? இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார்.

காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக்கொண்டே இருக்கிறாள். அப்போது ஒவ்வொரு ஸமயம் அவை கண் கோடிக்கு வரும்போது காதைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. அப்போது அவை காதிடம் ஏதோ ரஹஸ்யம் பேசுகிற மாதிரி மீன்களுக்குத் தோன்றுகிறது. என்ன ரஹஸ்யம்?





உருவத்தில் இந்த மீன்கள் அந்தக் கண் மாதிரிதான் இருக்கின்றன. ஸமஸ்த லோக அநுக்ரஹத்துக்காக, அந்தக் கண்கள் ஓயாமல் சஞ்சலிப்பதைப் பார்த்துக் 'காப்பி' அடிக்கிறது போலத்தான் இந்த மீன்களும் ஓயாமல் ஒழியாமல் ஜலத்திலே ஸஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் மீன்களுக்குப் பயம் பிடித்துவிடுகிறது! அம்பாளுடைய கண்கள் அவளுடைய காதிடம் 'மீன்கள் என்னோடு போட்டி போடுகின்றன' என்று ரஹஸ்யமாகக் கோள் சொல்கின்றனவோ என்று பயம்! கண்களுடைய 'பெட்டிஷனை'க் கேட்டு, மஹா பராசக்தியானவள் இந்த அல்ப ஜந்துக்களான மீன்களின் மேல் 'ஆக்ஷன்' எடுக்க வந்து விட்டால்?! இந்த பயத்தினால்தான் நீர்மட்டத்தின் மேல்பரப்பில் நீந்தாமல் அவை உள்ளுக்குள் மறைவாக மூழ்கிவிடுகின்றன!

தோற்றுப்போன துரியோதனன் மடுவுக்குள் போய் ஒளிந்து கொண்ட மாதிரி, அம்பாள் கண்ணழக்குத் தோற்றுப்போன மீன்கள் ஜலத்தின் உள்மட்டத்துக்குப் போய் விடுகின்றன!

'சபரிகா' என்றால் பெண் மீன்கள் என்று அர்த்தம். 'பைசுன்ய' என்றால் கோள் சொல்வது; 'கோழி மூட்டுவது' என்கிறோமே அது! 'சகிதா' என்றால் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறவை என்று அர்த்தம்.

அம்பாளின் கண்களோடு யுத்தம் செய்தால் வடிவழகு, ஸஞ்சரிக்கும் ஸாமர்த்தியம், இரண்டிலுமே தோற்றுப்போய்விடுவோம் என்றே மத்ஸயங்கள் ஜலத்துக்குள் அஞ்ஞாத வாஸம் ஆகி விடுகின்றன.

மதுரை மீனாக்ஷ¢ ஆலயப் பொற்றாமரைக் குளத்தில் மீனே இருப்பதில்லை. காரணம், அவளுடைய கண்ணழகில் வெட்கி அது அங்கே தலை காட்டுவதில்லை என்று ஒரு பிரஸித்தி ஏற்பட்டிருக்கிறது.

-காஞ்சி பெரியவர், குமுதம் ஜங்ஷன்

Sunday, November 08, 2009

புனித உடல்

நம் உடல் புனிதமானது என்பதை அடிக்கடி நாம் மறந்துவிடுகிறோம். மிகவும் சூட்சுமமாக இயங்குகின்ற இந்த உடலின் ரகசியங்களில் ஒரு சதவீதம்கூட முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த வாழ்நாள் போதாது. நாம் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு அறிவு நிரம்பியதாக உள்ளது நமது உடம்பு. அதன் பேச்சை நாம் கேட்பதே இல்லை. ஆனால், உடலின் மொழியை நாம் அலட்சியப் படுத்தக் கூடாது.

சாத்திரவேதம் சதகோடி கற்றாலும்
சமய நெறிகளில் சாரம் பெற்றாலும்
பாத்திர மேந்தி புரத்தில் அலைந்தாலும்
பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
மாத்திரைப் போது எமன் வரும் அப்போது
மற்றொன்றும் உதவாது உதவாது உதவாது
சூத்திரமாகிய தோணி கவிழுமுன்
சுக்கானை நேர்ப்படுத்து இக்கணமே சொன்னேன்
- குணங்குடி மஸ்தான் சாகிபு

சூத்திரமாகிய தோணி என்பது நம் உடல்தான். அது கவிழ்ந்து விடும்முன் சுக்கானைச் சரிபடுத்தவேண்டும். இல்லாவிட்டால் கடலில் விழுந்துவிடும் கப்பல், உயிரை இழந்துவிடும் உடல்.

எனவே, உடல் என்ற கருவியைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போகும்போது உயிர் அதை விட்டுவிடுகிறது. இதையே மரணம் என்கிறோம்.

-கடோபநிஷத், ஸ்ரீ உமாஷக்தி, வரம் பதிப்பகம்

முந்தைய பதிவுகள்

Followers