Wednesday, December 25, 2019

சுந்தர காண்டம் - 30 - கண்டான் சீதாப்பிராட்டியை!

சிம்சுபா மரத்தில் மறைந்து கொண்டு அனுமன் சுற்றுப் புறத்தை நோக்குகிறான்.

எல்லாக் காலங்களுக்கும் உரித்தான பூக்கள், பழக்குலைகள் தொங்கும் மரங்கள், மலர்ந்த மலர்களையுடைய அசோக மரங்களின் ஒளியினால் அசோகவனம் மிகப் பிரகாசமாய்த் தோன்றுகிறது.

இந்திரனுடைய நந்தனம் என்கிற வனத்தை ஒத்திருக்கிறது; குபேரனுடைய ரதத்தைப் போலிருக்கிறது என்று உவமைக்குத்தான் சொல்ல முடியுமே தவிர, இவைகளை விட உயர்ந்ததாயும், இராவணேசுவரனின் பிரியத்திற்கு உகந்ததாயும் இருக்கிறது அசோகவனம்.

தான் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் ஒரு தேவாலயத்தைக் காண்கிறான் அனுமன்; ஆயிரம் தூண்கள், கைலாச மலை போன்ற வெண்மை, பவளப் படிக்கட்டுகள், உருகிய தங்கத்தால் ஆன மேடைகள், மாசு மருவில்லாத கண்களைப் பறிக்கும் அழகுடன் மிகம் கூர்மையாயும், ஆகாயத்தைத் தொடும் உயரத்தில் இருக்கிறதாம் (skyscraper).

அழுக்கடைந்த ஆடை அணிந்தவளும், அரக்கியர்களால் சூழப்பட்டவளும், உணவு சரியாக உட்கொள்ளாததால் இளைத்தவளும், தளர்ந்தவளும், அடிக்கடிப் பெருமூச்சு விடுபவளும், தேய்பிறையின் இரண்டாம் நாள் - சிறு கோடாய்த் தோன்றும் - சந்திரன் போல் ஒளியிழந்து அடையாளம் காண முடியாதவளும், களங்கமில்லாதவளுமான ஒரு மங்கையைக் காண்கிறான் அனுமன் என்கிறார் வான்மீகி முனிவர்.

கம்பநாடன் 'கல்மருங்கெழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா நன்மருந்து போல' என்கிற உவமையை அழகாகச் சேர்த்து, சீதாப்பிராட்டியின் நிலையை எளிதாகச் சொல்லி விடுகிறான்.

அரக்கியர் சூழ்ந்து நெருக்கிய நிலையில் வாடிய சீதாப்பிராட்டி, கல்லிடைய முளைத்து, ஒரு துளி நீர் எதிர்பார்த்து, வறண்டு நிற்கும் அரியதோர் மூலிகையைப் போல இருந்தாளாம்.

செடிக்கு நீர் எப்படியோ அப்படி மனிதர்க்கு நம்பிக்கை என்பதையும் இங்கு நினைவூட்டுகிறான் நம் கம்பன்.

அனுமத் ஜயந்தி நன்னாளில், சீதாப் பிராட்டியைக் கண்ட அனுமன் தாள்களில் வீழ்ந்து பணிந்தோமாயின், வாழ்வின் மீதான நேர்மறையான நம்பிக்கை கூடும் என்பதில் ஒரு துளி ஐயமுமில்லை.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers