Wednesday, December 04, 2019

சுந்தர காண்டம் - 8 - கயிலையங்கிரியும் ஒத்தான்

சுந்தர காண்டம் பற்றிய பதிவுகளுக்குப் பின்னால் சான்றோர்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகள், பல புத்தகங்கள், இணையச் சுட்டிகள் தவிர,

இராமாயணத்தில் தோய்ந்த, ஆன்மீக வாழ்வில் அதீத ஈடுபாடு உடைய, என் மீது அளப்பரிய பிரியம் கொண்ட, எனது நண்பர் கணேஷ் அவர்களின் வழிகாட்டுதல்களும்,

'அவன் அருளாளே அவன் தாள் வணங்கி'யும் உண்டு.

இது பற்றி முழு விவரங்களைத் தொடர் முடிந்த பின் பகிர்கிறேன்.

============================================

மாபெரும் பணியில் ஈடுபடவிருக்கும் அனுமனின் மார்பு விரிகிறதாம்; தோள் வீங்குகிறதாம்; ஆர்ப்பரித்துத் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறானாம்; குன்றின் மீது ஏறி நின்று கடலைப் பார்வையிடுகின்றானாம். இது உவமைப்படுத்துகிறான் கம்பன்.

மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்.

மகேந்திர மலைமீது நின்ற அனுமனை கூர்மாவதாரமாகிய ஆமை மீது தோன்றிய மந்திர மலையைப் போல இருந்தானாம் (மலை கடைந்து அமுதம் வந்தது; அனுமன் கடல் கடந்து மகிழ்ச்சி வந்தது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்).

தரை அதிரும்படி நடந்து செல்லும் அனுமனின் வேகத்தால் மரங்களிலுள்ள பூக்கள் எல்லாம் உதிர்ந்து மலையெங்கும் பரவி இருந்தன என்கிறார் வான்மீகி முனிவர்.

உற்சாகம் பீறிட, 'சீதாப் பிராட்டியை எங்கிருந்தாலும் அழைத்து வருவேன்' என்கிறானாம்.

சுவாசத்தையடக்கி, காலால் மலையை உதைத்து அனுமன் எழும்பிய போது, வழியனுப்பும் உறவினர்கள் போல, கூட சில மரங்களும் சென்று கடலில் விழுந்தனவாம்.

வான்மீகி முனிவருக்கு வார்த்தைகள் வரவில்லை - கடல் கடந்து செல்லும் அனுமனை வர்ணிக்க... சூரியன்; பெரிய மலையே பெயர்ந்து வந்தது; யானை; பெருங்கலம் (கப்பல்); கார்மேகம் எனத் தேடித் தேடிப் பதங்களை இடுகிறார்; அனுமனின் உற்சாக ஊற்று அவரையும் விடவில்லை.

கம்பநாடன் சாதாரணமானவனா? இன்னும் யோசிக்கிறான்.

பெயர்ந்து வந்த மலை போல வருகிறான் - எப்படி?

முன்னர் இராவணேசுவரன் கயிலாய மலையைத் தூக்க முயன்ற போது, சிவபெருமானாரின் கட்டை விரல் அழுத்தத்தினால் நசுங்கிப்போனான். அது போதாதென்று அவனை மேலும் நசிப்பிக்கக் கைலாய மலையே பெயர்ந்து வந்ததாம்.

அண்ணல் வாள் அரக்கன்தன்னை அமுக்குவாம் இன்னம் என்னா
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங்கிரியும் ஒத்தான்.

அனுமன் கடல் கடந்து விட்டாலும், சுந்தர காண்ட ஆனந்தக் கடலில் நாம் இன்னும் நீந்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers