Saturday, December 21, 2019

சுந்தர காண்டம் - 26 - நம் துயரம் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

குழப்பமும், துயரமும் கலந்து கலங்கிய அனுமன் தைரியத்தை வளர்த்துக் கொள்கிறான்.

'சீதாப்பிராட்டியை அபகரித்த குற்றத்திற்காக இராவணேசுவரனைக் கொல்லப்போகிறேன் (அல்லது) இராவணேசுவரனைக் குண்டுக் கட்டாய்த் தூக்கி, பெருங்கடலைத் தாண்டி, - வேள்விச் சாலையில் சிவபெருமானை வேண்டிக் கொண்டு பலி ஆட்டை ஸ்தம்பத்தில் கட்டுவதைப் போல - இராமபிரானுக்குச் சமர்ப்பணம் செய்து விடுகிறேன்.'

சிவபெருமான் நினைவூட்டல் இயல்பாக நிகழ்கிறது.

இதையே கம்பநாடன் வேறு விதமாய் வெளிப்படுத்துகிறான்.

வல்அரக்கன் தனைப்பற்றி
வாயாறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால்
காட்டுஎன்று காண்கேனோ?

'மலையைக் கூடப் பொடியாக்கும் என் கைகளால், இராவணேசுவரனின் வாயில் இரத்தம் வரும்படியாய் இறுக்கிப் பிடித்துச் சீதாப் பிராட்டியை காட்டு என்பதைக் காணட்டுமா?' என்று நினைக்கிறானாம்.

மீண்டும் கலங்குகிறான் அனுமன். பின் தீர்க்கமான முடிவிற்கு வருகிறான்.

யாவத் ஸீதம் ஹி பஷ்யாமி ராமபத்நீம் யஷஸ்விநீம் |
தாவதே தாம் புரீம் லங்காம் விசிநோமி புன: புன:||

இதன் விளக்கத்தை என் நண்பன் Ganapathy Subramanian Sundaram ஒலி வடிவில் அனுப்பியதை இங்கே தருகிறேன்.

'இராமபிரானுடைய மனைவியும், அளப்பரிய புகழ் கொண்டவளுமான சீதாபிராட்டியைப் பார்க்கும் வரையில், இலங்காபுரியில் திரும்பத் திரும்பத் தேடப் போகிறேன்.' என்கிற உறுதியான நிலைக்கு வருகிறானாம் அனுமன்.

அனுமனுடைய குறிக்கோள் சீதாப் பிராட்டியைத் தேடுவது. அதற்குத்தானே இலங்காபுரிக்கு வருகிறான்? அதை விட்டு விட்டுக் கலங்கிப் போய் உட்கார்ந்தால், சீதாப்பிராட்டி கிடைப்பாரா? வந்த காரியம்தான் முடிந்து விடுமா?

நாம் எண்ணியது நடக்க வேண்டும் என்று பெரியவர்களை அணுகும்போது, அவர்கள் 'சுந்தர காண்டம் படி (அ) கந்த கோட்டம் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் போய் விட்டு வா (அ) ஒவ்வொரு பௌர்ணமியும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்' என்றெல்லாம் சொன்னால், நாம் எண்ணியது நடக்கும் வரை விடாது செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரு முறை சுந்தர காண்டம் பாராயணம் செய்து விட்டு, இரண்டு வாரங்கள் கந்தகோட்டம் சென்று விட்டு, மூன்று பௌர்ணமிகள் அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு நடக்கவில்லையே எனத் தளர்ந்து விடக் கூடாது என்பதைத்தான் அனுமன் மூலமாக நமக்குச் சேதி வருகிறது என்கிறான் என் நண்பன்.

அப்படி அனுமன் யோசித்து, செயல்பட நினைத்தவுடனே அசோகவனம் தென்பட்டு விடுகிறதாம்.

நாம் எண்ணியது ஈடேற ஏதேனும் ஒன்றை விடாது, உண்மையாகப் பற்றி வந்தாலே போதுமானது என்பதையும் இங்கு உணரலாம்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers