Saturday, December 14, 2019

சுந்தர காண்டம் - 19 - இராவணேசுவரனின் அந்தப்புரம் (தொடர்ச்சி)

சினம் எழுகிற போது அதைப் புத்தியைக் கொண்டு அணைப்பவர்கள் பெரியோர் என்பதை நொடியில் உணர்ந்து கொள்கிறான் அனுமன்.

'எதற்காக வந்தோம்? எதை செய்ய நினைக்கிறோம்? இது அறிவிற்கு உகந்துதானா? இப்படிச் செய்ய நினைப்பது துன்பத்திற்குத் தானே வழி வகுக்கும்? சீதாப்பிராட்டியின் நிலை என்னவாகும்?' எனப் பின் வாங்குகிறான் அனுமன்.

ஒன்று ஊக்கிஒன்று இழைத்தல்
உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்
பின்தூக்கின்இதுசாலப்
பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்.

'புத்திமதாம் வரிஷ்டம்' என்பதற்கு ஏற்ப நிதானமாய்ச் சிந்திக்கத் துவங்குகிறான் அனுமன். அது எப்படி இருந்ததாம்?

உலகங்களை எல்லாம் அழிக்கின்ற ஆற்றலை உடைய பெருங்கடலானது, காலத்தின் ஆணையை எதிர்பார்த்துக் கரையை மீறாது இருப்பது போல இருக்கிறான் அனுமன்.

உலகை
முற்றுவிக்கும் முறைதெரினும்
காலம் பார்த்து,இறைவேலை
கடவாதகடல் ஒத்தான்.

சடாரென மாறிப் போன காரணத்தை ஆராய்ந்தால்...

தேவர்களின் துன்பத்தை நீக்க வேண்டி, ஆலகால விடம் உண்ட சிவபெருமானைப் போல வலிமை பெற்றவன் என்றாலும், ஒழுக்கத்தைப் பாதுகாப்பவன் என்பதால் ஆராயாமல் ஒரு செயலைச் செய்யலாமா நான் என்று நினைக்கும் அனுமனைச் சிவபெருமான் அவதாரம் என்று சொல்லாமல் சொல்கிறான் கம்பநாடன்.

ஆலம்பார்த்து உண்டவன்போல்
ஆற்றல்அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்கஉரியோர்கள்
எண்ணாதுசெய்பவோ?

மீண்டும் சிவபெருமானைக் கொண்டு வருகிறான் கம்பநாடன்; இல்லையா பின்னே? சிவபெருமானே அனுமனாய் உருவெடுத்துத் திருமாலின் அவதாரத்திற்கு படிக்கல்லாய், அடிக்கல்லாய் இருக்கிறான்?

மீண்டும் பெண்கள்; அவர்கள் இராவணேசுவரனையே நினைத்துக் கொண்டு தூங்குகிறார்கள். அவன் முகமென்று அருகிலுள்ள பெண்ணின் முகத்தை முகர்ந்து இன்பங்காணுகின்றனர்; வீணையை அணைத்துக் கொண்டு சிலர்; மத்தளத்தைக் கட்டிக் கொண்டு சிலர்; ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு உறங்குபோது பெண் மாலையெனக் காட்சியளிக்கின்றனர்.

சுடர் விடும் தங்க விளக்குகள், ஆடாது அசையாது எரிந்து கொண்டிருப்பது, உறங்கிக் கொண்டிருந்த இராவணேசுவரனின் மகளிரைக் கண்கள் கொட்டாது பார்ப்பது போல இருந்தாம் (இராவணேசுவரன் விழித்துக் கொண்டு இருக்கும்போது பார்க்க முடியாது).

இராவணேசுவரனின் அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் அனைவரும், ஒருத்தி கூட மிச்சமில்லாமல், அவனது பராக்கிரமத்தாலும், குணத்தாலும் அடிமையானவர்கள். சீதாப்பிராட்டியைத் தவிர வேறு யாரும் வேறு ஒருவனால் விரும்பப்பட்டவளும் இல்லை; வேறு ஒருவனுக்கு மனைவியாய் இருந்தவளும் இல்லையாம் என்கிறார் வான்மீகி முனிவர்.

நதத்ர காஸ்சித் ப்ரமதா: ப்ரஸஹ்ய வீர்யோபன்னேன குணேன லப்தா: |
ந சான்யகாமாபி ந சான்யபூர்வா வினா வரார்ஹம் ஜனகாத்மஜாம் தாம் ||

இவர்களைப் பார்த்துவிட்டு, தனியே கட்டிலில் உறங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான் அனுமன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers