Saturday, November 30, 2019

சுந்தர காண்டம் - 4 - பணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்

சுந்தர காண்டத்தின் நாயகன் அனுமன்தான் என்பதை உறுதி செய்ய அனுமனே நமக்குத் துணை நிற்கிறான்.

தன்னைச் சோதிக்க வந்த ஸுரஸைக்கு இராம காதையைச் சொல்கிறான்.

சீதாப் பிராட்டியின் காணாது, தன்னிரக்கத்தில் மூழ்கும்போதும் இராம காதையை இயல்பாகவே அனுமன் அசை போடுகிறான்.

துக்க ஸாகரத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீதாப் பிராட்டியை இராம காதையைச் சொல்லி கரை ஏற்றுகிறான்.

தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பகைவர்கள் என்றாலும், கைலாய கிரியைப் பேர்த்தெடுத்த இராவணேசுவரன் முன்னால் நின்றாலும், உறுதியாய் இராம காதையை நயம்பட உரைக்கிறான்.

இராமபிரானிடம் தன் வீரப் பிரதாபங்களைச் சொல்லாது, 'கண்டேன் சீதாப்பிராட்டியை!' என்று மட்டும் சொல்லி மகிழ்ச்சியைத் தூண்டுகிறான்.

தான் நாயகன் அல்ல, இராமபிரானின் தாசானு தாசன் தான் என்பதை முக்கியமான கட்டங்களில் உணர்த்தியதோடு அல்லாமல் நமக்குப் பாடத்தையும் வைக்கிறான்.

அது, பணிவாய் இருப்பது; இயங்குவது. இதை நாம் புரிந்து கொண்டால் போதுமா?

பணிவாய் இருப்பது, இயங்குவது என்பது தன்னம்பிக்கை இல்லாமல் இருத்தல் அல்ல. அது அனுமனிடம் நிறைய இருக்கிறது.

கடலைத் தாண்டு முன், "இராமபாண இலக்கு போல இலங்கை ஒன்றே குறியாய்க் கொண்டு சீதாப் பிராட்டியைத் தேடுவேன். அங்கு இல்லாவிடில், தேவலோகம், ஆகாயத்திலும் தேடுவேன். சீதாப்பிராட்டி கிடைக்காவிடில் இராவணேசுவரனைக் கட்டிப் பிடித்து இழுத்து வருவேன். எப்படியும் சீதாப் பிராட்டியோடு திரும்புவேன்" - தன்னம்பிக்கை!

சீதாப் பிராட்டி கலங்குவதைச் சகியாது, "இப்போதே இராமபிரானிடம் சேர்த்து விடுகிறேன்" - தன்னம்பிக்கை!

யுத்தம் செய்யாவிட்டால், இராவணேசுவரனைக் காண முடியாது என்பதால், ஒற்றை ஆளாய்ப் போருக்கு அழைக்கிறான் அனுமன் - தன்னம்பிக்கை!

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தர்மம் புரியாது என்றாலும், இராவணேசுவரன் காது கொடுத்துக் கேட்க மாட்டான் என்றாலும், இதமாய் ஆயின் உறுதியாய் "சீதாப் பிராட்டியை இராமபிரானிடம் இணைக்கா விட்டால் அழிந்து போவாய்" என்று உரைக்கிறான் - தன்னம்பிக்கை!

வானரங்களுக்கு முக்கியமானது வால்; நெருப்பு வைத்தாலும் கலங்காது, இலங்கையைப் பகலில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவது எவ்வளவு பெரிய பாக்கியம்? என்று அனுமன் எண்ணுவது - தன்னம்பிக்கை!

ஆக, பணிவும், தன்னம்பிக்கையும் நிறைந்த ஆயின், அனுமனின் அளப்பரிய சாகசங்களைக் கொண்ட சுந்தர காண்டத்தை நாமும் தினமும் கொஞ்சமேனும் பயின்று, பணிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வோம்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers