Wednesday, December 18, 2019

சுந்தர காண்டம் - 24 - நம் துயரம் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

இராவணேசுவரனின் இருப்பிடத்தில் நன்றாகத் தேடிப் பார்த்தும், சீதாப்பிராட்டி தென்படாததால், தனக்குள் பேசிக் கொள்கிறான் அனுமன்.

'இலங்காபுரி முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன். எல்லா வளங்களும் நிறைந்த இந்நிலம் முழுவதும் அலைந்து தேடியாயிற்று. சீதாப் பிராட்டியைக் காணவில்லையே?'

'கழுகார் சம்பாதி சொன்னது போல இலங்காபுரியில் சீதாப்பிராட்டியைக் காணவில்லையே?'

'பலவந்தமாய்க் கொணர்ந்ததில் இராவணேசுவரனுக்கு இணங்கியிருப்பாரோ? இராமபாணம் எங்கிருந்தாலும் என்னை விடாதே என்கிற பயத்தினால், இராவணேசுவரன் தன் பிடி தளர்ந்து அவரை விட்டிருப்பானோ?'

'பெருங்கடலைக் கண்டு சீதாப்பிராட்டியாரின் இதயம் நின்றிருக்குமோ? இராவணேசுவரன், தனக்கு இணங்காததால், அவரைத் தின்றிருப்பானோ? தீய எண்ணங்கள் கொண்ட இராவணேசுவரன் மனைவியர் அவரைப் பங்கிட்டுத் தின்று விட்டார்களோ?'

'இராமபிரானின் திருமுகத்தைத் தியானித்துக் கொண்டே தன் உயிரை விட்டிருப்பாரோ? அல்லது இராவணேசுவரனின் இருப்பிடத்திலேயே ரகசியமாய் ஓர் இடத்தில் வைக்கப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பாரோ?'

'இராவணேசுவரனுக்கு வசப்பட வாய்ப்பில்லை. ஆயின், மரணத்தைத் தழுவியிருந்தால், இராமபிரானிடம் இச்சேதியை எப்படிக் கூறுவேன்?'

'அவரிடம் இதைச் சொன்னாலும் குற்றம்; சொல்லாவிட்டாலும் பெருங்குற்றம்; என்னுடைய கடமைதான் என்ன?'

இதையே கம்ப நாடன் மிக அழகான தமிழில் அருளுகிறான்.

கொன்றானோ ?
கற்பழியாக் குலமகளை கொடு்ந்தொழிலால்
தின்றானோ?
எப்புறத்தே செறித்தானோ சிறை ?
சிறியேன் ஒன்றானும் உணரகிலேன்;
மீண்டு இனிப்போய் என்னுரைக்கேன்.

'எடுத்துக் கொண்ட காரியம் ஈடேறாத நிலையில் காலத்துக்குத் தக்கவாறு நான் என்ன முடிவு எடுக்க வேண்டும்?' என அனுமன் தனக்குள் பேசிக் கொள்வதை விட்டு விட்டு, மீண்டும் ஆலோசிக்கிறான்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers