Monday, January 13, 2020

சுந்தர காண்டம் - 49 - குணம் மாறும் பாத்திரங்கள்

இராவணேசுவரன் அரக்கியரை அழைக்கிறான்.
அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுறத்தேற்றியானும்
வஞ்சியிற் செவ்வியாளை வசித்தென்பால் வருவீர்,
அன்றில் நஞ்சுமக்காவென் என்னா
"பயமுறுத்துங்கள்; அறிவை(?)க் கொண்டு சொல்லுங்கள்; எவ்விதத்திலும் இவளை என் வசப்படுத்துங்கள்; இல்லையெனில், உங்களுக்கு நான் ஆலகால விடம் போலக் கொடியவனாவேன்!" என்று உத்தரவிடுகிறான்.

சினம் கொண்ட இராவணேசுவரனை இடைமறித்து, தான்யமாலினி என்கிற மனைவி சமாதானம் செய்கிறாள். "இஷ்டமில்லாத பெண்ணை விட, தங்களிடம் விருப்பம் கொண்ட மங்கையே மகிழ்ச்சியைப் பெருக்குவாள்." என்று அவனுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறாள்.

அவளுக்குப் பதில் சொல்லவில்லை; ஏனெனில் இராவணேசுவரன் காம வேட்கையால் துடிக்கவில்லை; பெண்களுக்குள் மாணிக்கத்தை அடையத் தவிக்கிறான் என்கிறார் வான்மீகி முனிவர்.

தன்னையும், தன்னைச் சுற்றியிருக்கும் பெருஞ்செல்வத்தையும், சுகத்தையும் துச்சமாக மதித்த பெண்ணின் மதிப்பைப் பெறுவதை விட எது முக்கியம்? தான் காமம் வசப்பட்டு, தன்னிலை இழக்கவில்லை, தனக்கும் மனோபலம் உண்டு என்பதை நமக்குக் காட்ட நினைத்தே வலுவில் வந்த தான்யமாலினியை நிராகரிக்கிறான் இராவணேசுவரன். இதனால்தான் இந்தக் காட்சியைத் தவிர்த்து விடுகிறான் கம்பநாடன்.

சீதாப்பிராட்டிக்கு அடிமையாகத் துணியும் இராவணேசுவரன்; ஆயின், சிறையிலிருந்தாலும், விடுதலைக்கு ஓர் வழியில்லாதிருந்தாலும், வீராங்கனையாக விளங்குகிறார் சீதாப்பிராட்டி.

வாழ்வில் பற்றை இழந்தவுடன் அச்சம் தொலைகிறது சீதாப்பிராட்டிக்கு; மிரட்டுபவன் போலி என்று உணர்ந்த பேதை அவனை மிரட்டுகிறார்.

தான் சிறை வைத்த பிராட்டிக்கு, பேதைப் பெண்ணுக்கு அஞ்சி நிற்கும் நிலைக்குத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டான் இராவணேசுவரன்.

ஆக, யாருக்கு வீரம், யாருக்கு பேதமை? பாத்திரங்களின் தன்மை இங்கு மாறித்தான் போய்விட்டது!

No comments:

முந்தைய பதிவுகள்

Followers