சீதாப்பிராட்டியைக் கண்டு உவகை கொண்ட அனுமன் அவரைச் சூழ்ந்து காவல் காக்கும் அரக்கியரைக் காண்கிறான்.
வான்மீகி முனிவரும், கம்பநாடனும் சளைக்காமல் அரக்கியரையும் வர்ணித்திருப்பது சுந்தர காண்டத்திற்கு மெருகூட்டுகிறது.
வெருவரு தோற்றத்தர் - பயத்தை உண்டு பண்ணும் தோற்றத்தை உடையவர்கள்.
உருவு கொண்ட ஆலம் அனைய மேனியர் - முழு வடிவம் எடுத்த விஷம் போன்ற உடலைக் கொண்டவர்கள்.
ஆறு பாடல்களில் அரக்கியரை வர்ணித்தாலும், வார்த்தைகளில் வராத அளவுக்குச் சீதாப் பிராட்டியைக் கொடுமைப் படுத்துவதால்,
பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர் - பெண் என்று பெயரளவே தவிர பெண்மை இல்லாத திரிபு நிலையை உடையவர்கள்.
என்று மனத்தாங்கலோடு முடித்துவிடுகிறான் கம்பநாடன்.
வான்மீகி முனிவர் 17-ம் ஸர்க்கம் சுலோகங்கள் 5 - 17 வரை அரக்கியரைக் குறிப்பிட்ட பின், அனுமன் சீதாப்பிராட்டியை மீண்டும் கொண்டாடுவதாய் அமைத்திருக்கிறார்.
ஒரு கண், ஒரு காது, காதற்றவள், கூந்தல் இல்லாதவள், பன்றி - மான் - புலி - எருமை - ஆடு நரி போன்ற முகமுடையவர்கள், யானை - ஒட்டகம் - குதிரை போலக் கால்களை உடையவர்கள், எப்போதும் புலால் - கள் போன்றவைகளில் நாட்டமுடையவர்கள், விகாரமானவர்கள், பயங்கரமானவர்கள் என்று அனுமன் காட்சியை வான்மீகி முனிவர் அருளுகிறார்.
இவர்களுக்கு நடுவில் சீதாப்பிராட்டி,
தன் நாயகனுக்குக் கட்டுப்பட்டு,
கொடிய அரக்கியர்க்கு வசப்படாது,
அசோகவனத்து மத்தியில் சோகக் கடலில் மூழ்கி,
பூக்காத பூங்கொடி போல்,
இருக்கிறார் என்று அனுமன் உருகுகிறான்.
No comments:
Post a Comment