சீதாப்பிராட்டியின் பெருமையை அனுமன் நினைத்துப் பார்க்கிறான்.
'இவர் பொருட்டல்லவா இராமபிரான் வாலியை வீழ்த்தினார்?'
'கபந்தன், விராதன், கரன், தூஷணன் மடிந்ததும் இவரால்தானே?'
'சுக்ரீவ மகாராஜாவிற்கு அரசு கிடைக்கச் செய்ததும் இவர்தானே?'
'நான் கடல் கடந்து வந்ததும் இவர் பொருட்டல்லவா?'
'கணவன் மீது கொண்ட அளப்பரிய காதலினால் மாளிகையைத் துறந்து, வனத்தின் தனிமையை நாடினாள்; தன் கஷ்டங்களைப் பற்றி நினையாது, காய் கனிகளை உண்டு களித்திருந்தாள்.'
'இன்று இந்த அசோகவனத்தின் பூக்கள், பழங்கள், மரங்கள் எதுவும் கண்களுக்குத் தென்படவில்லை; சுற்றியிருக்கும் அரக்கியரும் பொருட்டில்லை. ஒருமைப்பட்ட இவரது மனம் இராமபிரானையே நாடியிருக்கிறது.'
நைஷா பச்யதி ராக்ஷஸ்யோ நேமான் புஷ்ப பல த்ருமான் |
ஏகஸ்த ஹ்ருதயா நூனம் ராமமேவ அனுபச்யதி ||
இவர் உயிர் தரித்திருப்பது இராமபிரான் வருகையை எதிர்பார்த்து; ஆயின் இராமபிரான் - இவரைப் பிரிந்தும் - உயிர்தரிப்பது அசாதாரணம் என்கிற முடிவிற்கு வருகிறான் அனுமன்.
கம்பநாடனும் உருக்கமாகச் சொல்கிறான்.
சுருதிநாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்
சுருதி மாதிரம் அனைத்தியும் அளக்கின்ற கண்ணாள்.
இராமபிரான் வருவான் வருவான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எல்லாத் திக்குகளிலும் - வானத்தையே அளப்பது போன்ற - பார்வையை இடுகிறாளாம் சீதாப்பிராட்டி (கண்ணாள்!).
No comments:
Post a Comment