பல பெண்களைச் சேர்வதும், பிறன் மனை கவர்வதும் அரக்கர் வழக்கம்.
உன் மனம் மாறியதும் என் ஆசை கரம் புரண்டு ஓடும்.
நீ சோகத்தில் ஆழ்ந்திருப்பது சரியல்ல. என்னை நம்பு. என்மேல் அன்பு செலுத்து.
பெண்களுக்குள் மாணிக்கம் நீ. இப்படி இருக்கலாமா?
ஸ்த்ரீ ரத்னம் அணி மா ஏவம் பூ: குரு காத்ரேஷு பூஷணம்
எழில்மிகு இளமை வீணாய்ப் போகிறது; ஆற்று வெள்ளம் போல போன நாட்கள் திரும்புமா?
உன்னைப் படைத்த பின் பிரமனே ஓய்வு கொண்டான்; ஆஹா! எங்கெங்கு விழிகளைச் செலுத்தினாலும் உன் அழகே அழகு!
கம்பநாடனும் பிரமனுடைய விந்தையை வியக்கிறான்; ஆயினும் ஒரு குறையாம். என்ன?
தெருளு நான்முகன் செய்ததுன் சிந்தையின்
அருளும் மின்மருங்கும் அரிதாக்கியோ
'இடை எவ்வளவு சிறியதாய்க் கண்ணுக்குப் புலப்படாது இருக்கிறதோ, அவ்வளவுதான் உன் கருணை என் மீது!
(மின்மருங்கும் - மின்னலைப் போன்ற இடை, பொருந்தாக் காமம் கொண்டோர்க்குத் தேவியின் கடைக் கண் பார்வை கூடக் கிட்டாது என்கிறான் கம்ப நாடன்).
நான் இறப்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படவில்லை; என்னை விட ஏற்ற துணைவன் உனக்கு இல்லையே? என்றே நான் கவலைப்படுகிறேன்.
எங்கெல்லாமே சென்று, உத்தமப் பெண்களைக் கொணர்ந்து வந்திருக்கிறேன்; அவர்களனைவருக்கும் மேலாக நீ முதலிடம் பெறுவாய்.
உலகையே உன் பொருட்டு வென்று உன் தந்தை சனக மகாராஜாவிற்கு அளிப்பேன்.
அந்த நாடிழந்த இராமன் உயிரோடு இருக்கிறானோ, இல்லையோ?
கருடன் பாம்பைக் கொத்திப் போவது போல என் மனதைக் கவர்ந்து விட்டாய்! (கருடன் பாம்பைக் கொத்தியபின், பாம்பிற்கு அழிவுதான் என்பதைத் தன்னையறியாது கூறுகிறான்).
இராமன் தவத்திலோ, பலத்திலோ, வீரத்திலோ, செல்வத்திலோ, உடல் அமைப்பிலோ, புகழிலோ எனக்கு ஈடாகான் (இராமபிரானைப் பார்த்திராமலேயே, அவர் நிகரற்றவர் என்கிறான்!).
தேவலோகத்தில் ஶ்ரீதேவிக்குத் தேவ மகளிர் எப்படிக் கைகட்டிச் சேவகம் செய்வார்களோ, அப்படி இங்கு உனக்கு நடக்கும்.
என்னுடைய செல்வத்தை ஏற்றுக்கொண்டு என்னையும் ஏற்றுக்கொள்; நாமிருவரும் உல்லாசமாய்ச் சுற்றி வரலாம்.
என மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுகிறான் இராவணேசுவரன்.
No comments:
Post a Comment