அனுமன், மிகுந்த பராக்கிரமசாலி என்றாலும் (அப்போது), இராவணேசுவரனின் மாயாஜாலத்தின் முன் எடுபடாது, இலைகளின் அடர்ந்த பகுதியில் தன்னை மறைத்துக் கொள்கிறான்.
பொருந்தாக் காமம் எனும் மதம் பிடித்த யானையைப் போல வந்து கொண்டிருக்கும் இராவணேசுவரனையும், சோகமே அணிகலனாய்க் கொண்ட தூயவளான சீதாப்பிராட்டியையும் மாறி மாறிப் பார்த்து அனுமன் மனம் பதைக்கிறான்.
ஊசல் ஆடி உளையும் உளத்தினன்
அனுமன் தடுமாற்றம் அடைந்து, மன உளைச்சல் கொண்டான் என்கிறான் கம்பநாடன்.
இராவணேசுவரனால் ஏதும் தீங்கு வாராதிருக்க வழக்கம்போல இராமபிரானையே தோத்திரம் செய்திருக்க வேண்டும் அனுமன்; ஆயின், சீதாப்பிராட்டியைக் கண்ட பின் அனுமனது உள்ளம் அவரின் பால் அளவற்ற பக்தி கொண்டு விடுகிறது. அதைப் பாடலில் உணர்த்திய கம்பநாடன் அறிவை என்னென வியப்பது!
வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழிதோறும் புதிதுஉறும் கீர்த்தியான்.
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழிதோறும் புதிதுஉறும் கீர்த்தியான்.
ஒவ்வொரு யுகத்திலும் புதுமையான புகழை உடைய அனுமன் என்று கம்பநாடன் அருளியதைப் படிக்கும்போது நமக்கு அனுமன் மீது பக்தி பெருகுகிறது.
கம்பநாடன் இராவணேசுவரனின் மாட்சியை விளக்குவதற்காக பத்தொன்பது பாடல்களை அருளினான்; வான்மீகி முனிவர் ஸர்க்கம் 17-18-களில் இராவணேசுவரனின் மாண்பையும், சீதாப்பிராட்டியின் நிலையையும் உருக்கத்தோடு அருளுகிறார்.
ஏன் இவ்வளவு விரிவாகத் தீயவனைச் சித்தரிக்க வேண்டும்? சீதாப்பிராட்டி தன் கற்பையும், பிறப்பையும் காத்துக் கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்குடன் எத்தகைய மாவீரனை எதிர்த்து நிற்கிறார் என்பதை நமக்கெல்லாம் தெரிவிப்பதற்காகத்தான்.
சுந்தர காண்டத்தைத் தொடர்ந்து படித்தால், நமக்கும் இது போன்ற வலிமையான, நல்லவைகளைத் தொடர்ந்து நாடும் உள்ளம் நிச்சயம் கிட்டும்.
No comments:
Post a Comment