Wednesday, January 08, 2020

சுந்தர காண்டம் - 44 - மறம் தரு செங் கணாய்!

வான்மீகி முனிவர் அருளியிருக்கும் இராவணேசுவரனின் உரையாடல், காமத்தில் மூழ்கி, பொறுமை இழந்த மூர்க்கன், முரடன் போலவே தொடங்கும்;

'அழகியவளே! நீ என்னைப் பார்த்து அச்சப்பட்டு உன் மார்பகங்களையும், வயிற்றையும் மறைத்துக் கொள்வதன் மூலம் அவை என் கண்களில் படாமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறாய் போலும்!'

'உன்னைக் கண்டு யார்தான் மயங்க மாட்டார்? உன் அகன்ற கண்கள் போதுமே!' என்றுதான் துவங்குகிறான்.

எவ்வளவு பெரிய அறிவாளியாயிருந்தாலும், பேரரசை ஆண்டாலும், வீரத்தைக் கொண்டாலும், பொருந்தாக் காமம் எல்லாவற்றையும் அழித்து, மூர்க்கனாக்கி விடும் என்பதே வான்மீகி முனிவர் நமக்கு உரைக்கும் பாடம். காமம் என்பதை ஆசை எனப் பொதுப் பொருள் கொண்டோமானால், நம் வாழ்க்கையின் இரகசியம் எளிதாய் நமக்கு விளங்கிப் போகும்.

ஆயின், கம்பநாடன் இராவணேசுவரன் கொஞ்சம் வித்தியாசமான வில்லன்; தீமை செய்வதிலும் தன் நுட்பமான அறிவினைச் செலுத்துகிறான்; அதனாலேயே, இழிந்த காமத்தைக் கலையாக மாற்றிப் போற்றிப் பேசுகிறான்.

இன்று இறந்தன, நாளை இறந்தன,
என் திறம் தரும்தன்மை இதால்;

'நீ இரங்குவாய் எனக் கருதிய பல இன்றைய தினங்களும், உன் மனம் மாறும் என நான் கருதிய பல நாள்களும் கடந்து போயின! உன் அருள் அந்த அளவிற்குத்தான் என் மீது உள்ளது!' என்று புத்திசாலித்தனமான காதலனாகப் பேசத் துவங்குகிறான். ஆனாலும்...அவனே சொல்லும் சொற்கள்...

மறம் தரு செங் கணாய்! - மேலோட்டமாய்ப் பார்த்தால், கண்களால் கொல்லாதே என்கிற பொருள்தான்; ஆயின், கம்பநாடன் இராவணேசுவரன் வாயிலாகவே, 'தேவி! உன் கண்களால் என்னை எரித்துச் சாம்பலாக்கும் வல்லமை உண்டு' என்பதைத் தன்னை அறியாது சொல்கிறான்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers