பட்டினி, சோகம், தியானம், பயம் இவை நான்கும் ஒருங்கே சீதாப்பிராட்டியை வாட்ட, உடல் நலிந்து, மெலிந்து தவம் செய்யும் அன்னையைப் போலிருக்கும் சீதாப்பிராட்டியிடம் ஆசை வார்த்தைகளைக் கொட்டுகிறான் இராவணேசுவரன்.
தான் அழிந்து போவதற்குத்தான் இப்படிப் பேசுகிறான் என்பார் வான்மீகி முனிவர்.
அனுவ்ரதாம் ராமமதீவ மைதிலீம் ப்ரலோபயாமாஸ வதாய ராவண:
'கொடிய நஞ்சை அமுதமென நினைத்து வேண்டும் தீயோன்' என்கிறான் கம்பநாடன்.
வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்.
எப்பேர்ப்பட்ட மாவீரன் இராவணேசுவரன்? கைலாய கிரியைப் பெயர்க்கத் துணிந்தவன்; சிவபெருமானிடம் அளவற்ற பக்தியை உடையவன்; சிவபெருமானை வணங்கும்போதும் தன் பெருமைக்குப் பங்கம் வராமல் காப்பவன்; குறைவில்லாத வீரம் கொண்டவன்; பொருந்தாக் காமத்தில் விழுந்த பின், வெட்கம் மட்டுமே மிஞ்சிப் போய் வந்து வந்து போகிறது என்று ஏசுகிறான் கம்பநாடன்.
கூசிக் கூசி இவையிவை கூறினான்.
இனிய சொற்களால் சீதாப்பிராட்டியின் மனத்தை மாற்ற முயற்சிக்கிறான் இராவணேசுவரன்.
No comments:
Post a Comment