பொழுது புலரச் சில மணித்துளிகளே உள்ள போது, வேதம் ஓதும் பிராமண ராக்ஷஸர்களின் கோஷங்களைக் கேட்கிறான் அனுமன். மங்கல வாத்தியங்களின் ஒலி, செவிக்கும் மனதிற்கும் இதமளிக்கும் ஒலிகளைக் கேட்டு இராவணேசுவரனும் விழித்துக் கொள்கிறான்.
இராவணேசுவரன் வருகின்ற காட்சி, அவனுடைய மாட்சியைப் போட்டி போட்டு கொண்டு வான்மீகி முனிவரும், கம்பநாடனும் அருளுகின்றனர்.
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர
மேனகை வெள்ளடை உதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
அரம்பையர் குழாம்புடை சுற்ற
ஊர்வசி உடைவாள் எடுத்துக்கொண்டு பின்னே வருகிறாளாம்; மேனகை வெற்றிலை வழங்குகிறாளாம்; செருப்பினைத் திலோத்தமை தாங்குகிறாளாம்; தேவ மகளிர் சூழ வரும் இராவணேசுவரன் எப்படி இருக்கிறான்?
அனுமன் வாயிலாக வான்மீகி முனிவர்,
ஸமக்ஷமிவ கந்தர்ப்பம் அபவித்த சராஸனம்
வில்லைத் தரிக்காத மன்மதனே நேரில் வந்தது போல இருந்தானாம் என்கிறார். கரும்பு வில் இல்லாததுதான் குறையாம்!
பொருந்தாக் காமத்தை ஒளிக்க முடியவில்லை; மதுமயக்கம்; தோளிலிருந்து நழுவும் வெண்மை நிறங் கொண்ட மேலாடையை அலட்சியமாக அதனிடத்தில் வைத்த அழகை அனுமன் ரசிக்கிறான்.
எண்ணற்ற மங்கையர்கள் கடைக்கண் நோக்கிக் காத்திருக்க, அவர்களை மதியாதவனாய், சீதாப்பிராட்டியை எண்ணி எண்ணிக் காமத்தீ கொழுந்தெரிய அவரை நோக்கி வருகிறான் இராவணேசுவரன்.
இச்சந்திப்பால் என்ன நிகழுமோ என அஞ்சுகிறான் தேவேந்திரன்; ஆதிசேடனோ இவனது நடையைத் தாங்காது நடுங்குகிறான்; இரணியனை அழித்த நரசிங்கத்தின் சுவட்டினைக் கண்ட யானையைப் போல, திக்கு யானைகள் அலறுகின்றன.
No comments:
Post a Comment