Thursday, November 28, 2019

சுந்தர காண்டம் - 2 - நேர்மறை நோக்கு வாழ்வைத் தருவது

சுந்தர காண்டத்தில் தற்கொலை விளிம்பு வரை செல்லும் இரண்டு பாத்திரங்கள் உண்டு.

எங்கு தேடியும் சீதாப் பிராட்டியைக் காணாது கலங்கி நிற்கும் அனுமன் (ஸர்க்கம் 12-13) வழி தெரியாது தன்னந்தனியாய்ப் புலம்புகிறான். 'கடலைத் தாண்டினேனே, மைனாகப் பர்வதத்தின் நட்பு பூண்டேனே, ஸுரஸையை ஜயித்தேனே, ஸிம்ஹிகையைக் கொன்றேனே, இலங்கை தேவதையை வென்றேனே, இலங்கையில் எல்லா இடங்களிலும் பரிபூர்ணமான சுதந்திரத்துடன் தேடினேனே, ஆனாலும், 'அம்மா'வைக் காணவில்லையே? என்ன செய்வேன்?' என்று அரற்றும் அனுமனின் சோகம் படிக்கும் உங்களையும் பற்றிக் கொள்ளும்.
'இராமபிரானிடம் 'சீதாப்பிராட்டியைக் காணவில்லை' எப்படி இயம்ப முடியும்? இங்கேயே பட்டினி கிடந்து உயிர் துறக்கிறேன்' என்கிற அனுமனின் முடிவு, அசோக வனத்தைக் கண்டவுடன் அடியோடு மாறிப் போகிறது.

இதே போல ராவணேசுவரனால் மிரட்டப்பட்டு, ராக்ஷஸிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு, 'இராமபிரான் எனைக் காக்க வருவாரா?' என்கிற ஐயப்பாடு மிகுந்து, சீதாப் பிராட்டி, 'சரி! பின்னலைக் கொண்டு தூக்கில் தொங்கலாம்' (ஸர்க்கம் 28) என்கிற கொடிய முடிவுக்குத் தள்ளப்படும் கட்டம்.  மிகவும் நெருக்கடியான சூழலில், அனுமன் மூலமாய் இராமாயணத்தைக் கேட்க நேரிடுகிறது; சுப சகுனங்கள் தோன்றுகின்றன. அனுமனுடனான சந்திப்பு சீதாப் பிராட்டியை வலிமை கொள்ளச் செய்கிறது.

நம் அனைவரின் வாழ்விலும் இத்தகைய தருணங்கள் வராமலிருக்கவும், வந்து மீளாது இருந்தாலும், சுந்தர காண்டம் பாராயணம் செய்வது போதுமானது.

வாழ்வை நேர்மறையாய் நோக்கக் கண்டிப்பாய் சுந்தர காண்ட பாராயணம் உதவும்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers