Friday, July 15, 2005

சங்கரன் கோவில்

சங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன் திருவடிகளைக் காட்டும் பேரழகி கோமதி. கல்லாய் நின்றாலும் கல் மனத்தைக் கரைக்கும் அழகி அவள். 'ஆத்தா' என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பும் பாமரர் பக்திக்குப் பாய்ந்து வந்து உதவும் பராபரை அவள். உடற்பிணி உற்றோர் 'பிணியே பிணிக்கு மருந்தே' என்றபடி இவளை வேண்ட நோய் நீங்கி நலம் பெறுவது நாளும் நடக்கும் அதிசயம்.

இந்தக் கோமதியம்மையிடம் சண்டைக்குப் போனார் ஒரு தமிழ்ப்புலவர். ஒரு பிள்ளை என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டியவள் தாய்தானே? எலி பிடிப்பது எப்படி என்று குட்டிப் பூனைக்குத் தாய்ப் பூனைதானே கற்றுக்கொடுக்கிறது. பால் குடிக்கத் தெரியாத பச்சைக் குழந்தையைத் தாய் பட்டினி போடுவாளா? மார்பருகே அணைத்து எப்படி அருந்துவது என்று அறியாத சிசுவுக்கு எடுத்து ஊட்டும் கருணை தாயின் கடமை அல்லவா?

அது மாதிரி பக்தி பண்ணத் தெரியாது திரிந்து எமனிடம் சிக்க இருக்கும் ஜீவனைப் பால் குடிக்கப் பழக்கும் தாய் மாதிரி, திருவடி நிழலுக்குப் பழகும் பக்தனாக்குவது உன் கடமை அல்லவா? என்று சண்டைக்குப் போகிறார் அழகிய சொக்கநாதப் பிள்ளை. பருந்து பறந்து வந்து குஞ்சுகளைக் கொத்த வந்தால் -- பலகீனமான தாய்க்கோழி கூடத் துரத்துமே! குஞ்சுகளை இறகுகளில் ஒடுக்குமே! எமனிடமிருந்து மீட்டு இறகுகளில் அடைக்கும் கோழிக்கு உள்ள கருணை கோமதிக்கு வேண்டாமா?

" 'போடா' என்று எமனை விரட்டு! என்ன செய்வது என்று அறியாத இந்த மூடனை 'வாடா' என்று அழைத்துத் திருவடியில் அழுத்து. இப்படி செய்தால் யார் தடுப்பார் அன்னையே! கோமதி ஈஸ்வரியே!" என்று பாடினார். 'போ' என்று எமனை விரட்டு என்று சொல்லாமல், 'போடா' என்பதில் எமனிடம் வெறுப்பும் அம்பிகையின் அதிகார உரிமையும் வெளிப்பட்டது. பக்தனை 'வாடா' என்று அழைக்க வேண்டும் என்ற வரியில் பரிவு பாசம் இத்துடன் தன் மீது அவளுக்குள்ள உரிமையும் வெளிப்பட்டது.

'வா' என்பதை விட 'வாடா' என்பதில் நெருக்கமும் பாசமும் புலப்படும். உரிமை வெளியாகும். எந்த உரிமையும் கடமையுடன் கூடியது என்ற தர்க்க நியதிப்படி அம்பாளின் கடமையையும் நினைவூட்டும் பாடல் அழகிய சொக்கநாதரின் அழகிய பாடல்.

'கேடாவரும் நமனைக் கிட்டவராதே தூரப்
போடா என்றோட்டி உந்தன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்
வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்மா! உனைக்
கூடாதென்றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.'

- நன்றி: ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம், திரு சுகி சிவம், வானதி பதிப்பகம்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers