Saturday, November 30, 2019

சுந்தர காண்டம் - 4 - பணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்

சுந்தர காண்டத்தின் நாயகன் அனுமன்தான் என்பதை உறுதி செய்ய அனுமனே நமக்குத் துணை நிற்கிறான்.

தன்னைச் சோதிக்க வந்த ஸுரஸைக்கு இராம காதையைச் சொல்கிறான்.

சீதாப் பிராட்டியின் காணாது, தன்னிரக்கத்தில் மூழ்கும்போதும் இராம காதையை இயல்பாகவே அனுமன் அசை போடுகிறான்.

துக்க ஸாகரத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீதாப் பிராட்டியை இராம காதையைச் சொல்லி கரை ஏற்றுகிறான்.

தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பகைவர்கள் என்றாலும், கைலாய கிரியைப் பேர்த்தெடுத்த இராவணேசுவரன் முன்னால் நின்றாலும், உறுதியாய் இராம காதையை நயம்பட உரைக்கிறான்.

இராமபிரானிடம் தன் வீரப் பிரதாபங்களைச் சொல்லாது, 'கண்டேன் சீதாப்பிராட்டியை!' என்று மட்டும் சொல்லி மகிழ்ச்சியைத் தூண்டுகிறான்.

தான் நாயகன் அல்ல, இராமபிரானின் தாசானு தாசன் தான் என்பதை முக்கியமான கட்டங்களில் உணர்த்தியதோடு அல்லாமல் நமக்குப் பாடத்தையும் வைக்கிறான்.

அது, பணிவாய் இருப்பது; இயங்குவது. இதை நாம் புரிந்து கொண்டால் போதுமா?

பணிவாய் இருப்பது, இயங்குவது என்பது தன்னம்பிக்கை இல்லாமல் இருத்தல் அல்ல. அது அனுமனிடம் நிறைய இருக்கிறது.

கடலைத் தாண்டு முன், "இராமபாண இலக்கு போல இலங்கை ஒன்றே குறியாய்க் கொண்டு சீதாப் பிராட்டியைத் தேடுவேன். அங்கு இல்லாவிடில், தேவலோகம், ஆகாயத்திலும் தேடுவேன். சீதாப்பிராட்டி கிடைக்காவிடில் இராவணேசுவரனைக் கட்டிப் பிடித்து இழுத்து வருவேன். எப்படியும் சீதாப் பிராட்டியோடு திரும்புவேன்" - தன்னம்பிக்கை!

சீதாப் பிராட்டி கலங்குவதைச் சகியாது, "இப்போதே இராமபிரானிடம் சேர்த்து விடுகிறேன்" - தன்னம்பிக்கை!

யுத்தம் செய்யாவிட்டால், இராவணேசுவரனைக் காண முடியாது என்பதால், ஒற்றை ஆளாய்ப் போருக்கு அழைக்கிறான் அனுமன் - தன்னம்பிக்கை!

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தர்மம் புரியாது என்றாலும், இராவணேசுவரன் காது கொடுத்துக் கேட்க மாட்டான் என்றாலும், இதமாய் ஆயின் உறுதியாய் "சீதாப் பிராட்டியை இராமபிரானிடம் இணைக்கா விட்டால் அழிந்து போவாய்" என்று உரைக்கிறான் - தன்னம்பிக்கை!

வானரங்களுக்கு முக்கியமானது வால்; நெருப்பு வைத்தாலும் கலங்காது, இலங்கையைப் பகலில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவது எவ்வளவு பெரிய பாக்கியம்? என்று அனுமன் எண்ணுவது - தன்னம்பிக்கை!

ஆக, பணிவும், தன்னம்பிக்கையும் நிறைந்த ஆயின், அனுமனின் அளப்பரிய சாகசங்களைக் கொண்ட சுந்தர காண்டத்தை நாமும் தினமும் கொஞ்சமேனும் பயின்று, பணிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வோம்.

Friday, November 29, 2019

சுந்தர காண்டம் - 3 - கடல் தாண்டினான்

இராமாயணத்தின் மிகப் பெரிய ஸர்க்கங்களில் ஒன்றான சுந்தர காண்டத்தின் முதல் ஸர்க்கம் பற்றி விரிவாகப் பேசுமுன் அனுமன் கடல் தாண்டிய படலத்தைப் படித்து விடலாம்.

ஜாம்பவனால் தூண்டப்பட்ட அனுமன், இராவணேசுவரனால் எடுத்துச் செல்லப்பட்ட சீதாப் பிராட்டியைக் காண கடல் தாண்டும் முயற்சியில் இறங்கினான்.

அப்படி ஈடுபட்ட போது, மூன்று தடங்கல்கள் / இடையூறுகள் அனுமனுக்கு நிகழ்ந்தன.
1. மைநாக பர்வதம் அனுமனை பூஜிக்க வேண்டிக் கடலில் இருந்து வளர்ந்தது.

2. தேவர்களின் தூண்டுதலின் பேரில், ஸுரஸை அனுமனைத் தன் வாயினுள் புகுமாறு பணித்தது.

3. தனக்கு உரிய ஆகாரம் கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியுடன், ஸிம்ஹிகை என்கிற ராக்ஷஸி அனுமனைக் கொல்ல நினைத்தது.

இம்மூன்றையும் அனுமன் அநாயாசமாய்க் கடந்தான். கடலையும் தாண்டினான் சிறு களைப்பில்லாது.

இவைகளில் உயரிய அர்த்தம் இருக்கிறது எனப் பெரியோர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
எந்த ஒரு நல்ல காரியத்தை (அ) மேலான காரியத்தை நாம் செய்யும்போதும், மூன்று வகை இடையூறுகள் வரும்.

1. உறவினர்கள் - தன்னை வாயு பகவான் இந்திரனிடமிருந்து காப்பாற்றியமையால் மைநாக பர்வதம், வாயுவின் மகனான அனுமனை உபசரிக்கக் கடலில் இருந்து எழுந்தான்.

2. நண்பர்கள் - நேர்மறையான எண்ணம் கொண்டவர்களே நண்பர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் நம்மை நயத்துடன் அணுகி, ஸுரஸையைப் போல, சோதனை செய்து பார்ப்பது, நம் வலிமையை அறிவதற்காக இல்லை; இவன் செய்யப்போகிற காரியத்திற்குத் தகுந்தவனா என்பதை அறியவே.

3. எதிரிகள் - ஸிம்ஹிகை போன்ற எதிரிகள் 'எப்போது வீழ்வான் இவன்?' எனக் காத்துக் கொண்டிருப்பது கண் கூடாய்த் தெரியும். இவர்களையும் மீறித்தான் மேலான காரியங்களை முடித்துக் கொள்ள முடியும்.

இதைத்தான் அனுமன் அவனுக்கே உரிய பாணியில், கடல் தாண்டும் படலத்தின் போது, மைநாக - ஸுரஸை - ஸிம்ஹிகை எதிர்கொள்வதன் மூலம் நமக்குப் பாடம் கற்பிக்கிறான்.

அனுமன் சதா துதிக்கும் இராமபிரானின் முதல் பாணம் தாடகை எனும் பெண் மீதுதான்; அவர் பாதம் பணிந்து, வேறேதும் எண்ணம் செலுத்தாத அனுமன் முதலில் அழித்ததும் ஸிம்ஹிகை எனும் பெண்ணைத்தான். அந்த அளவிற்கு இராமபிரானிடம் தன்னைக் கொடுத்த அனுமனின் தாள் பணிவோம். போற்றுவோம்.

கடல் தாண்டி இலங்கைக்கு அனுமன் வந்து விட்டாலும், முதல் ஸர்க்கத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை இன்னும் சில...

Thursday, November 28, 2019

சுந்தர காண்டம் - 2 - நேர்மறை நோக்கு வாழ்வைத் தருவது

சுந்தர காண்டத்தில் தற்கொலை விளிம்பு வரை செல்லும் இரண்டு பாத்திரங்கள் உண்டு.

எங்கு தேடியும் சீதாப் பிராட்டியைக் காணாது கலங்கி நிற்கும் அனுமன் (ஸர்க்கம் 12-13) வழி தெரியாது தன்னந்தனியாய்ப் புலம்புகிறான். 'கடலைத் தாண்டினேனே, மைனாகப் பர்வதத்தின் நட்பு பூண்டேனே, ஸுரஸையை ஜயித்தேனே, ஸிம்ஹிகையைக் கொன்றேனே, இலங்கை தேவதையை வென்றேனே, இலங்கையில் எல்லா இடங்களிலும் பரிபூர்ணமான சுதந்திரத்துடன் தேடினேனே, ஆனாலும், 'அம்மா'வைக் காணவில்லையே? என்ன செய்வேன்?' என்று அரற்றும் அனுமனின் சோகம் படிக்கும் உங்களையும் பற்றிக் கொள்ளும்.
'இராமபிரானிடம் 'சீதாப்பிராட்டியைக் காணவில்லை' எப்படி இயம்ப முடியும்? இங்கேயே பட்டினி கிடந்து உயிர் துறக்கிறேன்' என்கிற அனுமனின் முடிவு, அசோக வனத்தைக் கண்டவுடன் அடியோடு மாறிப் போகிறது.

இதே போல ராவணேசுவரனால் மிரட்டப்பட்டு, ராக்ஷஸிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு, 'இராமபிரான் எனைக் காக்க வருவாரா?' என்கிற ஐயப்பாடு மிகுந்து, சீதாப் பிராட்டி, 'சரி! பின்னலைக் கொண்டு தூக்கில் தொங்கலாம்' (ஸர்க்கம் 28) என்கிற கொடிய முடிவுக்குத் தள்ளப்படும் கட்டம்.  மிகவும் நெருக்கடியான சூழலில், அனுமன் மூலமாய் இராமாயணத்தைக் கேட்க நேரிடுகிறது; சுப சகுனங்கள் தோன்றுகின்றன. அனுமனுடனான சந்திப்பு சீதாப் பிராட்டியை வலிமை கொள்ளச் செய்கிறது.

நம் அனைவரின் வாழ்விலும் இத்தகைய தருணங்கள் வராமலிருக்கவும், வந்து மீளாது இருந்தாலும், சுந்தர காண்டம் பாராயணம் செய்வது போதுமானது.

வாழ்வை நேர்மறையாய் நோக்கக் கண்டிப்பாய் சுந்தர காண்ட பாராயணம் உதவும்.

Wednesday, November 27, 2019

சுந்தர காண்டம் - 1 - சோகம் நீக்க வல்லது

வான்மீகி இராமாயணத்தில் பால, அயோத்திய, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர என ஏழு காண்டங்கள் உண்டு.

நடுவில் அமைந்திருக்கும் சுந்தர காண்டம் புனிதமானது என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. ஏன்?

1. ஸேநா நாயகன் அங்கதன், வழி நடத்துபவன் ஜாம்பவான், தெற்கே தேடும் வானரக் கூட்டத்தின் - கடலைத் தாண்டி சீதாப் பிராட்டியைக் காண முடியுமா - சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

2. கடல் தாண்டி வந்தாலும், லங்கா தேவதையை வென்றாலும், லங்கா நகரம் முழுவதும் சுற்றி வந்தாலும், சீதாப் பிராட்டியைக் காண இயலாது பிதற்றும் அனுமனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

3. தன் நாயகனை விட்டுப் பிரிந்து, வருவரா, தன்னை மீட்பாரா, மீட்கும் வரை உயிர் மிஞ்சுமா, இதுதான் வாழ்வா, இப்படி வாழ்வது தேவைதானா என மீளாத் துயரில் ஆழ்ந்து, தற்கொலை எண்ணம் வரை சென்ற சீதாப் பிராட்டியின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

4. ராஜ்யத்தைப் பெற உதவி செய்த நண்பன் இராமபிரானுக்குக் கைம்மாறு ஏதும் இதுவரை செய்ய இயலாமல் போனதே என்று பரிதவிக்கும் சுக்ரீவனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

5. 'கண்டேன் சீதையை!' எனும் இரண்டு வார்த்தைகளில் இராமபிரானின் அளப்பரியச் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

உங்களைச் சோகம் பற்றிக் கொள்ளும் தருணங்களில் 'சுந்தர காண்டம்' போதும். வாழ்வின் அருமையையும், பொறுமையின் அவசியத்தையும் மிக அழகாய்க் கற்றுத் தரும்.

உலக வாழ்விலிருந்து உய்வு அடைய, இராமபிரான் - சீதாப் பிராட்டி அருள் கிட்ட, அனுமனின் ஆசிகள் பெற, சுந்தர காண்டம் நிச்சயம் உதவும்.

Thursday, December 06, 2018

உபதேசமும் அனுஷ்டானமும்!

நான் சொல்ல வந்த விஷயம், 'ஒருவருடைய பழக்கம் அவருக்கு நல்லதில்லை, அதை நல்லபடியாக மாற்ற வேண்டும்' என்று இன்னொருத்தருக்கு இருந்தால், இவர் அந்தப் பழக்கத்தைத் தாமே அநுஷ்டானத்தில் நடத்திக் காட்ட வேண்டும். நாம் பிறத்தியாருக்குச் சொல்வதுதான் நிஜமாகவே நல்லது என்ற நம்பிக்கை முதலில் நம் மனசில் பூரணமாக வரவேண்டும்.

இந்த மாதிரி முழு நம்பிக்கை இல்லாமலே கூடப் பெரிசாக உபந்நியாசம் பண்ணிவிடலாம். ஆனால் அது லோகத்தில் எடுபட வேண்டுமானால் முதலில் தனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கப்புறம் 'நல்லதாக நாம் நினைக்கிறதை நாமே காரியத்தில் பண்ணிப் பார்க்க முடியுமா?' என்று பிரயாசைப்பட வேண்டும். மற்றவர்களை 'அதைப் பண்ணு, இதைப் பண்ணு' என்று வைகிறது ரொம்ப சுலபம். ஆனால் நாமே அதைப் பண்ணிக் கொள்ள முடிகிறதா என்று பார்த்துக் கொண்டால்தான், இன்னொருத்தனை வைகிற லாயக்கு நமக்கு உண்டா என்று தெரியும்.

இத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் சொல்வது என்ன? நம் மனசு, ஆசைகள் இப்படி கட்டுப்படாமல் ஓடிக் கொண்டேயிருக்க்கக் கூடாது என்பதுதான். தன்னைத்தானே அடக்கிக் கொள்வதில்தான் எல்லாம் இருக்கிறது. அதற்குத்தான் சாஸ்திர விதிகள் எல்லாம். ஒருத்தன் எத்தனைக்கெத்தனை நல்ல நம்பிக்கையோடு, முடிகிற வரையில் தன்னை இம்மாதிரி அடக்கிக் கொண்டு, எவ்வளவு தூரம் தன்னைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறானோ, அந்த அளவுக்கு அவனால் உலகம் சீர்படும். அந்த அளவுக்குத்தான். இவன் கொஞ்சம் கூடத் தன்னை உயர்த்திக் கொள்ளாமல் உலகத்தையே உயர்த்துகிறேன் என்று எத்தனை உபந்நியாசம் செய்தாலும் வீண்தான்.

உலகம், உலகம் என்கிறேனே, இதனால் இந்த லோகம் முழுக்கவும் என்று அர்த்தமில்லை. இவன் யாரைச் சீர்படுத்த வேண்டும் என்று நினைக்கிறானோ, அவர்கள்தான் இவனுக்கு உலகம். இவனுடைய சொந்த வாழ்க்கைச் சக்தி அதிகமாக ஆக, இன்னும் தானாக மற்றவர்களும் இவன் வழிக்கு மாறலாம். இவனுடைய சொந்த நிறைவுதான் முக்கியம்.

நான் சொன்னபடி கேட்க முடியவில்லையே என்று பரிதாபப்பட்டுக் கொள்கிறீர்கள். ஸ்வாமிகள் இவ்வள்வு சொன்னாரே, நாம் கேட்கவில்லையே என்று என்னிடமும் ரொம்பப் பரிதாபப்படுகிறீர்கள். இனிமேலாவது கொஞ்சம் கேட்டால் தேவலையே என்று தனித்தனியாகவும், எல்லோரும் சேர்ந்தும் என்னிடம் பரிதாபப் பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கேட்கவில்லை என்பதற்காகப் பரிதாபம் வேண்டாம். வேறு எதற்காகப் பரிதாபப் பட வேண்டும்?

இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு ரொம்பக் கடுமையாகத் தோன்றினால் கூட, தனக்குத் தெரிகிற குறையைச் சொல்லத்தான் வேண்டும் என்ற நியாயப்படி சொல்கிறேன்; உங்களை நீங்கள் நல்ல வழிக்கு அடக்கிக் கொண்டு வரும்படி நான் செய்யவில்லை என்றால், என்னை நானே அடக்கிக் கொள்ளும்படியான சக்தி, எனக்கு அத்தனை குறைச்சலாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆகையால், நீங்கள் நான் சொன்னதைக் கேட்காததற்காக என்னிடம் பரிதாபம் வேண்டாம். எனக்கு என்னையே அடக்கிக் கொள்கிற சக்தி போதவில்லையே என்பதற்காகத்தான் பரிதாபப்பட வேண்டும்.

என்னை எவ்வளவு தூரம் அடக்கிக் கொள்ளும்படியான சக்தி எனக்கு இருக்கிறதோ, அவ்வளவு தூரத்துக்கே நீங்கள் எல்லாமும் திருந்தியிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் எவ்வளவு திருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவும் நான் திருந்தியாக வேண்டும். அதற்கான சக்தி எனக்கு வருவதற்காக நான் ஸ்வாமியைப் பிரார்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். பிரார்த்திக் கொண்டே திருந்த முடியாமல் மறுபடியும் மறுபடியும் எத்தனை இடைஞ்சல் வந்தாலும் கஷ்டப்பட்டுக்கொண்டு, பிரயத்தனத்தைப் பண்ணியாக வேண்டும்.

இப்படிப் பண்ணி என்றைக்காவது நானும் ஸித்த புருஷனாக (நிறைந்த நிறைவு என்ற லட்சியத்தை அடைந்து, அதிலிருந்து விலகாதபடி நிலைத்துவிட்டவனாக) ஆகி விட்டேனானால், அப்போது நீங்கள் எல்லோரும் தானே அந்த ஸித்தியை அடைந்து விடுவீர்கள்; நிறைந்து விடுவீர்கள்.

-ஜகத்குரு காஞ்சிப் பெரியவர்

Sunday, January 27, 2013

தணியா வதிமோ கதயா பரனே!

..பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே!
 
 -கந்தரநுபூதி

‘தணியா அதிமோக தயாபரனே!’ இங்கு மோகம் என்றால் கணவன் மனைவியிடத்து வைக்கும் மோகம் என்று பொருள் அல்ல. மோகம் என்றால் கருணை. முருகனது அருள் பெற்றவர் அருணகிரிநாதர். முருகனைச் சிந்திக்கும் அடியார் பார்க்கும் திக்கில் காமம் இருக்காது. ஆகையினாலே, சுப்பிரமணிய சுவாமி வள்ளியிடம் போய்ப் பணிந்தாரா? பணியவில்லை. பணியவில்லையா? பணிந்தார்.

பதினெட்டு வருடங்களாக ஒருவனுக்குக் குழந்தை இல்லை. பிறகு முருகனருளால் பிறந்தது. குழந்தைக்கு வயது ஒன்றரை ஆயிற்று. ஒரு நாள் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. தாய் புறக்கடையில் வேலையாயிருந்தாள். தகப்பன் அறுவடைக்குச் சென்றிருந்தான். குழந்தை தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. எதிரே ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கைத் தொட்டால் சுடும் என்று குழந்தைக்குத் தெரியாது. ஏதோ பிரகாசமான பொருளாக இருக்கின்றதே என்று எண்ணி, விளக்கின் தண்டைப் பிடித்துக் கொண்டு தொட முயன்றது. அந்தச் சமயத்தில் குழந்தையின் தகப்பன் வந்தான். குழந்தையை அப்படியே வாரி அணைத்து, ‘திருத்தணி முருகா! நான் வர அரை நிமிடம் தாமதமாயிருந்தால் குழந்தையின் கதி என்னவாயிருக்கும்? எல்லாம் உன் செயல்!’ என்றான். குழந்தையைக் கவனிக்கவில்லையென்று தாயைக் கோபிக்கலாமா? விவேகமில்லாதவர்கள்தான் மனைவியைக் கோபித்துக்கொள்வான். கருணையும் அன்பும் நிறைந்த தந்தை குழந்தைக்கு விளக்கைத் தொட்டால் சுடும் என்று சொல்ல விரும்பினார். குழந்தைக்குச் சொன்னாலோ புரியாது.

விளக்கினால் குழந்தைக்கு இடர் வரும். அதனால் விளக்கியே தீரவேண்டும். விளங்காத குழந்தைக்கு விளங்க வைக்க வேண்டும். என்ன சொல்லி விளக்குவார்? குழந்தைக்கு முன் தந்தை இரண்டு தடவை விளக்கில் கை வைப்பது போல் வைத்தார். உதறினார். அழுதார். வைத்தாரா? வைக்கவில்லை. வைக்கவில்லையா? வைத்தார். உதறினாரா? இல்லை. உதறவில்லையா? உதறினார். அழுதாரா? இல்லை. அழவில்லையா? அழுதார். விளங்காத குழந்தைக்கு விளங்க வைத்தார். அது போல முருகன் நடித்துக் காண்பிக்கிறார். என் திருவடியை நினைந்தாலொழிய இந்த மகமாயை தொலையாது எனறு விளங்க வைக்கிறார் முருகன்.

கந்தரநுபூதி விரிவுரை (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகன் வாரியார் பதிப்பகம்) புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

Saturday, January 12, 2013

கொடுங்கூற்று என் செயும்?

மரணத்தைப் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது மனதில் வந்து போகின்றன.  பல சமயங்களில் பயம் எட்டிப் பார்க்கிறது.  ஏன் என்று தெரியவில்லை.


ஔவையார் கூறுவது
...கணபதி என்றிடக் காலனும் கைதொழும்’

அருணகிரிநாதர் உரைப்பது

..கொடுங்கூற்று என் செயும்
குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும்,
தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!



குமரேசனது இரு தாள்கள் (பாதங்கள்) அதில் ஒலிக்கும் சிலம்புகள், சதங்கைகள், தண்டைகள், ஆறுமுகங்கள், பன்னிருதோள் களும், அதில் கடப்பமலர் மாலையும், முன்னே வந்து தோன்றும்போது, எமனே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.


அபிராம பட்டர் அருளுவது

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய - கவர்ந்து கொண்ட, செவ்வியும் - செம்மையான (நிறம்), அவ்வியம் - அசுத்தங்கள், வெவ்விய - சினம்/கோபம்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.


திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்
சுலபமாக்கித் தருகிறார்


....எய்ப்பென்னை வந்து நலியும் போதங்
கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளி யானே!


மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.

என்றெல்லாம் தினமும் படித்தாலும், அமரத்வம் என்று ஏதுமில்லை.  பிறந்தவன் மரிப்பான்.  மரணம் வந்தே தீரும். தடுக்க முடியாது.  படத்தில் வரும் ‘எல்லோருக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் போட்டுத்தான் இறைவன் அனுப்பறான்’ என்றெல்லாம் சில சமயங்களில் முதிர்ச்சியாய் எண்ணினாலும் ஏனோ மரணத்தின் மீதான அச்சம் போகவேயில்லை.

வாழ்க்கையை நான் விரும்பும்படி - புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது, ஆலயங்களுக்குச் செல்வது, நல்ல படங்களைத் தியேட்டரில் பார்ப்பது, உணவு வகைகளைத் தேடிச் சாப்பிடுவது, சமயத்தில் என்னை நொந்து கொள்வது, குடும்பத்தை ஓரளவுக்குச் சீராகக் கொண்டு செல்வது, எழுதிக் கிழிப்பது - என அமைத்துக்கொண்டாலும் இந்த எண்ணம் சமீப காலமாய் வந்தும், போயும் கொண்டிருக்கிறது.

நிற்க.

வருடத் துவக்கத்தில் எங்கள் குலதெய்வம் குணசீல ப்ரஸன்ன வேங்கடாசலபதி பெருமானையும், என்னைக் காத்த, காக்கும் தெய்வம் சுவாமிமலை சுவாமிநாதனையும் தரிசித்து விடுவேன். 

சுவாமிமலையில் பொது தரிசனத்தில் ஐயப்ப பக்தர்கள் திரண்டிருந்ததால், ஐம்பது ரூபாய் சிறப்புத் தரிசனத்தில் சுவாமிநாதனைத் தரிசனம் செய்தேன்.   முருகனைப் பார்த்துக் கொண்டும்,  தோத்திரங்களைப் படித்துக் கொண்டுமிருந்தேன்.

விபூதி அலங்காரத்தில், கையில் வேலுடன், வெள்ளிக் கவசத்தில் பிரம்மாண்டமாய் நின்ற முருகன், தனிமை, ஏகாந்தம் என் மனதை ஈர்த்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே உட்காரச் செய்துவிட்டது.  வார்த்தைகளில் விவரிக்க இயலாத, அனுபவித்துதான் அறிய முடியும் சூழல்.

வெளியில் வந்து, பிரகாரத்தைச் சுற்றும்போது மனதில் தோன்றியது ‘ போறுமேடா! இதுக்கு மேலே என்ன வேணும்?  அப்படியே செத்துப் போயிறலாம்!’

அப்பனுக்கு மட்டும் அல்ல, இந்தப் பொடியனுக்கும் கூட சுவாமிநாதன் ஒரு பாடத்தைத் தந்ததாகத்தான் நினைக்கிறேன்.

Tuesday, January 01, 2013

வாக்குண்டாம்!


சரஸ்வதி, லட்சுமி தேவியருடன் இருக்கும் பிள்ளையார் படங்கள் சர்வ சாதாரணமாய்த் தமிழ்நாட்டில் தென்படும்.


எனக்கு இது புதிராய் இருந்தது. விநாயகருக்கும், அலைமகள் / கலைமகள் இருவருக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விக்கு நெடுங்காலம் விடை கிடைக்காமலேயே இருந்தது.



பூஜா ரூம் என்கிற புத்தகத்தில் கணபதியைப் பற்றிய பாட்டு ஒன்றைப் படித்தேன். மஹாபெரியவர் அவர்கள் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் அந்தப் பாட்டை எழுதியவர் ஔவைப் பாட்டி என்றும் தெரிந்து கொண்டேன். என்னுடைய கேள்விக்கு விடை இங்கு கிடைத்தது.

நீங்களும் படியுங்களேன்....

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-ஔவையார்

உடலை வருத்திக்கொள்ளாமல் பூக்களைக் கொண்டு, தும்பிக்கை கொண்ட பவள நிறத் திருமேனியோன் விநாயகன் திருவடிகளைத் தினந்தோறும் தவறாமல் துதிப்பவருக்கு, நல்ல வாக்கு உண்டாகும்; நல்ல மனம் உண்டாகும்; இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.
.
மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல் துப்பு ஆர் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி

இணையத்தில் மேய்ந்தபோது, மேலும் சில அரிய விஷயங்கள் கிடைத்தன.

அ. மூதுரை என அழைக்கப்படும் நூலில் அமைந்த கடவுள் வாழ்த்து இந்தப் பாடல். எளிய கருத்துகளுக்காக ‘வாக்குண்டாம்’ என்கிற இன்னொரு பெயரும் நூலுக்கு உண்டு.

ஆ. இன்றைய அரிய சொற்கள்
1. நுடங்காது - வருத்திக் கொள்ளாது
2. துப்பு - பவளம்


இ. துப்பு என்கிற சொல் இங்கும் புழங்குகிறது
1. துப்பு உறழ் துவர் வாய் - கம்ப ராமாயணம்
2. துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி - திருப்புகழ்

2013 ஆண்டின் முதல் நாள் அங்காரக சதுர்த்தி (செவ்வாய் அன்று வரும் சங்கடஹர சதுர்த்தி) நன்னாளோடு துவங்குகிறது.

Saturday, April 14, 2012

பாலபிஷேகம்!

ஒன்று கவனிக்க வேண்டும். 


சந்தனாபிஷேகம்என்கிற மாதிரியே பல பேர்பாலாபிஷேகம்என்கிறார்கள்.  அது தப்பு.  பாலபிஷேகம்என்றுவைக் குறிலாகவே சொல்ல வேண்டும்.  சந்தன’, ‘க்ஷீரஎன்ற வார்த்தைகள்காரத்தில் முடிவதால் அவற்றோடுஅபிஷேகம்என்றுகாரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில்காரங்கள் சேர்ந்து ஒரு நெடில்காராமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன.



பால்என்கிற வார்த்தைகாரத்தில் முடியாமல்ல்என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது.  அதோடுஅபிஷேகம்சேரும்போது ல் + என்பது (குறிலான) ‘ஆகத்தான் வருமாதலால்பாலபிஷேகம்என்றுதான் ஆகும்.  தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்ஆகுமே தவிரதேனாபிஷேகம்அல்ல.



இதே மாதிரிதான்ஷடாக்ஷரம்என்பதும் தப்பு.  ஷடக்ஷரம்தான்.  பஞ்ச + அக்ஷரம்பஞ்சாக்ஷரம்; அக்ஷ்ட + அக்ஷரம்அக்ஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட் + அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்.



-காஞ்சிப் பெரியவர்

Saturday, March 31, 2012

இராம நவமி!

இராம நவமியன்று பிறந்தவர் என் தந்தை. 

தன் பிறந்த நாளை இராமனின் நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து திளைத்தவர்.  ராம கதையைச் சொற்பொழிவாற்றி, பல உள்ளங்களைக் குளிர்வித்தவர்.  வால்மீகி / கம்பரில் திளைத்து, திளைத்து மெருகேற்றிக்கொண்டவர்.  சுந்தர காண்டம் ஸப்த ஸர்க்க (ஏழு அத்தியாயங்கள்) பாராயணத்தைத் தினமும் செய்து, ஆன்ம பலத்தைப் பெருக்கி, குடும்பத்தை ஏற்றம் பெறச் செய்தவர்.  குருவாய் இருந்து, ராம நவமியன்று எனக்கு சுந்தர காண்டம் எடுத்துக்கொடுத்து, வாழ்க்கையின் சவால்களைத் தைரியமாகவும், ஆன்மீகமாயும் எதிர்கொள்ளச் செய்தவர்.

அவரைப் பற்றிப் பேசுவதை விட இந்நாளில் இராமனைப் பற்றிச் சிந்திப்பதையே விரும்பியிருப்பார் என்பதால் ‘உயிர் எழுத்து’-ல் அமைந்த, ராமனின் சரிதத்தைச் சொல்லும் பாடலை (அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து) என் தந்தையின் தாள்களில் வணக்கமாகச் சமர்ப்பிக்கின்றேன்.

அன்றொரு நாள் ராமன் வனம் சென்றதுவும்
ஆங்கவன் பொன்மானைக் கொன்றதுவும்
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்
உம்பியொருவனை ராமன் பெற்றதுவும்
ஊறுசெய் வாலிதனை அழித்ததுவும்
எம்பிரார்க்காய் அனுமன் கடல் கடந்ததுவும்
ஏற்றமிகு லங்கை தீப்பட்டதுவும்
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்
அஃதன்றே ஒரு பாடல் ராமகதை…!

‘அப்பா! இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்’ என்றே அவர் 75வது பிறந்த நாளன்று வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

முந்தைய பதிவுகள்

Followers