Showing posts with label பிள்ளையார். Show all posts
Showing posts with label பிள்ளையார். Show all posts

Tuesday, January 01, 2013

வாக்குண்டாம்!


சரஸ்வதி, லட்சுமி தேவியருடன் இருக்கும் பிள்ளையார் படங்கள் சர்வ சாதாரணமாய்த் தமிழ்நாட்டில் தென்படும்.


எனக்கு இது புதிராய் இருந்தது. விநாயகருக்கும், அலைமகள் / கலைமகள் இருவருக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விக்கு நெடுங்காலம் விடை கிடைக்காமலேயே இருந்தது.



பூஜா ரூம் என்கிற புத்தகத்தில் கணபதியைப் பற்றிய பாட்டு ஒன்றைப் படித்தேன். மஹாபெரியவர் அவர்கள் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் அந்தப் பாட்டை எழுதியவர் ஔவைப் பாட்டி என்றும் தெரிந்து கொண்டேன். என்னுடைய கேள்விக்கு விடை இங்கு கிடைத்தது.

நீங்களும் படியுங்களேன்....

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-ஔவையார்

உடலை வருத்திக்கொள்ளாமல் பூக்களைக் கொண்டு, தும்பிக்கை கொண்ட பவள நிறத் திருமேனியோன் விநாயகன் திருவடிகளைத் தினந்தோறும் தவறாமல் துதிப்பவருக்கு, நல்ல வாக்கு உண்டாகும்; நல்ல மனம் உண்டாகும்; இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.
.
மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல் துப்பு ஆர் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி

இணையத்தில் மேய்ந்தபோது, மேலும் சில அரிய விஷயங்கள் கிடைத்தன.

அ. மூதுரை என அழைக்கப்படும் நூலில் அமைந்த கடவுள் வாழ்த்து இந்தப் பாடல். எளிய கருத்துகளுக்காக ‘வாக்குண்டாம்’ என்கிற இன்னொரு பெயரும் நூலுக்கு உண்டு.

ஆ. இன்றைய அரிய சொற்கள்
1. நுடங்காது - வருத்திக் கொள்ளாது
2. துப்பு - பவளம்


இ. துப்பு என்கிற சொல் இங்கும் புழங்குகிறது
1. துப்பு உறழ் துவர் வாய் - கம்ப ராமாயணம்
2. துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி - திருப்புகழ்

2013 ஆண்டின் முதல் நாள் அங்காரக சதுர்த்தி (செவ்வாய் அன்று வரும் சங்கடஹர சதுர்த்தி) நன்னாளோடு துவங்குகிறது.

முந்தைய பதிவுகள்

Followers