Sunday, January 27, 2013

தணியா வதிமோ கதயா பரனே!

..பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே!
 
 -கந்தரநுபூதி

‘தணியா அதிமோக தயாபரனே!’ இங்கு மோகம் என்றால் கணவன் மனைவியிடத்து வைக்கும் மோகம் என்று பொருள் அல்ல. மோகம் என்றால் கருணை. முருகனது அருள் பெற்றவர் அருணகிரிநாதர். முருகனைச் சிந்திக்கும் அடியார் பார்க்கும் திக்கில் காமம் இருக்காது. ஆகையினாலே, சுப்பிரமணிய சுவாமி வள்ளியிடம் போய்ப் பணிந்தாரா? பணியவில்லை. பணியவில்லையா? பணிந்தார்.

பதினெட்டு வருடங்களாக ஒருவனுக்குக் குழந்தை இல்லை. பிறகு முருகனருளால் பிறந்தது. குழந்தைக்கு வயது ஒன்றரை ஆயிற்று. ஒரு நாள் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. தாய் புறக்கடையில் வேலையாயிருந்தாள். தகப்பன் அறுவடைக்குச் சென்றிருந்தான். குழந்தை தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. எதிரே ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கைத் தொட்டால் சுடும் என்று குழந்தைக்குத் தெரியாது. ஏதோ பிரகாசமான பொருளாக இருக்கின்றதே என்று எண்ணி, விளக்கின் தண்டைப் பிடித்துக் கொண்டு தொட முயன்றது. அந்தச் சமயத்தில் குழந்தையின் தகப்பன் வந்தான். குழந்தையை அப்படியே வாரி அணைத்து, ‘திருத்தணி முருகா! நான் வர அரை நிமிடம் தாமதமாயிருந்தால் குழந்தையின் கதி என்னவாயிருக்கும்? எல்லாம் உன் செயல்!’ என்றான். குழந்தையைக் கவனிக்கவில்லையென்று தாயைக் கோபிக்கலாமா? விவேகமில்லாதவர்கள்தான் மனைவியைக் கோபித்துக்கொள்வான். கருணையும் அன்பும் நிறைந்த தந்தை குழந்தைக்கு விளக்கைத் தொட்டால் சுடும் என்று சொல்ல விரும்பினார். குழந்தைக்குச் சொன்னாலோ புரியாது.

விளக்கினால் குழந்தைக்கு இடர் வரும். அதனால் விளக்கியே தீரவேண்டும். விளங்காத குழந்தைக்கு விளங்க வைக்க வேண்டும். என்ன சொல்லி விளக்குவார்? குழந்தைக்கு முன் தந்தை இரண்டு தடவை விளக்கில் கை வைப்பது போல் வைத்தார். உதறினார். அழுதார். வைத்தாரா? வைக்கவில்லை. வைக்கவில்லையா? வைத்தார். உதறினாரா? இல்லை. உதறவில்லையா? உதறினார். அழுதாரா? இல்லை. அழவில்லையா? அழுதார். விளங்காத குழந்தைக்கு விளங்க வைத்தார். அது போல முருகன் நடித்துக் காண்பிக்கிறார். என் திருவடியை நினைந்தாலொழிய இந்த மகமாயை தொலையாது எனறு விளங்க வைக்கிறார் முருகன்.

கந்தரநுபூதி விரிவுரை (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகன் வாரியார் பதிப்பகம்) புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

Saturday, January 12, 2013

கொடுங்கூற்று என் செயும்?

மரணத்தைப் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது மனதில் வந்து போகின்றன.  பல சமயங்களில் பயம் எட்டிப் பார்க்கிறது.  ஏன் என்று தெரியவில்லை.


ஔவையார் கூறுவது
...கணபதி என்றிடக் காலனும் கைதொழும்’

அருணகிரிநாதர் உரைப்பது

..கொடுங்கூற்று என் செயும்
குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும்,
தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!



குமரேசனது இரு தாள்கள் (பாதங்கள்) அதில் ஒலிக்கும் சிலம்புகள், சதங்கைகள், தண்டைகள், ஆறுமுகங்கள், பன்னிருதோள் களும், அதில் கடப்பமலர் மாலையும், முன்னே வந்து தோன்றும்போது, எமனே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.


அபிராம பட்டர் அருளுவது

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய - கவர்ந்து கொண்ட, செவ்வியும் - செம்மையான (நிறம்), அவ்வியம் - அசுத்தங்கள், வெவ்விய - சினம்/கோபம்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.


திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்
சுலபமாக்கித் தருகிறார்


....எய்ப்பென்னை வந்து நலியும் போதங்
கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளி யானே!


மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன்.

என்றெல்லாம் தினமும் படித்தாலும், அமரத்வம் என்று ஏதுமில்லை.  பிறந்தவன் மரிப்பான்.  மரணம் வந்தே தீரும். தடுக்க முடியாது.  படத்தில் வரும் ‘எல்லோருக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் போட்டுத்தான் இறைவன் அனுப்பறான்’ என்றெல்லாம் சில சமயங்களில் முதிர்ச்சியாய் எண்ணினாலும் ஏனோ மரணத்தின் மீதான அச்சம் போகவேயில்லை.

வாழ்க்கையை நான் விரும்பும்படி - புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது, ஆலயங்களுக்குச் செல்வது, நல்ல படங்களைத் தியேட்டரில் பார்ப்பது, உணவு வகைகளைத் தேடிச் சாப்பிடுவது, சமயத்தில் என்னை நொந்து கொள்வது, குடும்பத்தை ஓரளவுக்குச் சீராகக் கொண்டு செல்வது, எழுதிக் கிழிப்பது - என அமைத்துக்கொண்டாலும் இந்த எண்ணம் சமீப காலமாய் வந்தும், போயும் கொண்டிருக்கிறது.

நிற்க.

வருடத் துவக்கத்தில் எங்கள் குலதெய்வம் குணசீல ப்ரஸன்ன வேங்கடாசலபதி பெருமானையும், என்னைக் காத்த, காக்கும் தெய்வம் சுவாமிமலை சுவாமிநாதனையும் தரிசித்து விடுவேன். 

சுவாமிமலையில் பொது தரிசனத்தில் ஐயப்ப பக்தர்கள் திரண்டிருந்ததால், ஐம்பது ரூபாய் சிறப்புத் தரிசனத்தில் சுவாமிநாதனைத் தரிசனம் செய்தேன்.   முருகனைப் பார்த்துக் கொண்டும்,  தோத்திரங்களைப் படித்துக் கொண்டுமிருந்தேன்.

விபூதி அலங்காரத்தில், கையில் வேலுடன், வெள்ளிக் கவசத்தில் பிரம்மாண்டமாய் நின்ற முருகன், தனிமை, ஏகாந்தம் என் மனதை ஈர்த்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே உட்காரச் செய்துவிட்டது.  வார்த்தைகளில் விவரிக்க இயலாத, அனுபவித்துதான் அறிய முடியும் சூழல்.

வெளியில் வந்து, பிரகாரத்தைச் சுற்றும்போது மனதில் தோன்றியது ‘ போறுமேடா! இதுக்கு மேலே என்ன வேணும்?  அப்படியே செத்துப் போயிறலாம்!’

அப்பனுக்கு மட்டும் அல்ல, இந்தப் பொடியனுக்கும் கூட சுவாமிநாதன் ஒரு பாடத்தைத் தந்ததாகத்தான் நினைக்கிறேன்.

Tuesday, January 01, 2013

வாக்குண்டாம்!


சரஸ்வதி, லட்சுமி தேவியருடன் இருக்கும் பிள்ளையார் படங்கள் சர்வ சாதாரணமாய்த் தமிழ்நாட்டில் தென்படும்.


எனக்கு இது புதிராய் இருந்தது. விநாயகருக்கும், அலைமகள் / கலைமகள் இருவருக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விக்கு நெடுங்காலம் விடை கிடைக்காமலேயே இருந்தது.



பூஜா ரூம் என்கிற புத்தகத்தில் கணபதியைப் பற்றிய பாட்டு ஒன்றைப் படித்தேன். மஹாபெரியவர் அவர்கள் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் அந்தப் பாட்டை எழுதியவர் ஔவைப் பாட்டி என்றும் தெரிந்து கொண்டேன். என்னுடைய கேள்விக்கு விடை இங்கு கிடைத்தது.

நீங்களும் படியுங்களேன்....

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-ஔவையார்

உடலை வருத்திக்கொள்ளாமல் பூக்களைக் கொண்டு, தும்பிக்கை கொண்ட பவள நிறத் திருமேனியோன் விநாயகன் திருவடிகளைத் தினந்தோறும் தவறாமல் துதிப்பவருக்கு, நல்ல வாக்கு உண்டாகும்; நல்ல மனம் உண்டாகும்; இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.
.
மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல் துப்பு ஆர் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி

இணையத்தில் மேய்ந்தபோது, மேலும் சில அரிய விஷயங்கள் கிடைத்தன.

அ. மூதுரை என அழைக்கப்படும் நூலில் அமைந்த கடவுள் வாழ்த்து இந்தப் பாடல். எளிய கருத்துகளுக்காக ‘வாக்குண்டாம்’ என்கிற இன்னொரு பெயரும் நூலுக்கு உண்டு.

ஆ. இன்றைய அரிய சொற்கள்
1. நுடங்காது - வருத்திக் கொள்ளாது
2. துப்பு - பவளம்


இ. துப்பு என்கிற சொல் இங்கும் புழங்குகிறது
1. துப்பு உறழ் துவர் வாய் - கம்ப ராமாயணம்
2. துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி - திருப்புகழ்

2013 ஆண்டின் முதல் நாள் அங்காரக சதுர்த்தி (செவ்வாய் அன்று வரும் சங்கடஹர சதுர்த்தி) நன்னாளோடு துவங்குகிறது.

Saturday, April 14, 2012

பாலபிஷேகம்!

ஒன்று கவனிக்க வேண்டும். 


சந்தனாபிஷேகம்என்கிற மாதிரியே பல பேர்பாலாபிஷேகம்என்கிறார்கள்.  அது தப்பு.  பாலபிஷேகம்என்றுவைக் குறிலாகவே சொல்ல வேண்டும்.  சந்தன’, ‘க்ஷீரஎன்ற வார்த்தைகள்காரத்தில் முடிவதால் அவற்றோடுஅபிஷேகம்என்றுகாரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில்காரங்கள் சேர்ந்து ஒரு நெடில்காராமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன.



பால்என்கிற வார்த்தைகாரத்தில் முடியாமல்ல்என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது.  அதோடுஅபிஷேகம்சேரும்போது ல் + என்பது (குறிலான) ‘ஆகத்தான் வருமாதலால்பாலபிஷேகம்என்றுதான் ஆகும்.  தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்ஆகுமே தவிரதேனாபிஷேகம்அல்ல.



இதே மாதிரிதான்ஷடாக்ஷரம்என்பதும் தப்பு.  ஷடக்ஷரம்தான்.  பஞ்ச + அக்ஷரம்பஞ்சாக்ஷரம்; அக்ஷ்ட + அக்ஷரம்அக்ஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட் + அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்.



-காஞ்சிப் பெரியவர்

Saturday, March 31, 2012

இராம நவமி!

இராம நவமியன்று பிறந்தவர் என் தந்தை. 

தன் பிறந்த நாளை இராமனின் நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து திளைத்தவர்.  ராம கதையைச் சொற்பொழிவாற்றி, பல உள்ளங்களைக் குளிர்வித்தவர்.  வால்மீகி / கம்பரில் திளைத்து, திளைத்து மெருகேற்றிக்கொண்டவர்.  சுந்தர காண்டம் ஸப்த ஸர்க்க (ஏழு அத்தியாயங்கள்) பாராயணத்தைத் தினமும் செய்து, ஆன்ம பலத்தைப் பெருக்கி, குடும்பத்தை ஏற்றம் பெறச் செய்தவர்.  குருவாய் இருந்து, ராம நவமியன்று எனக்கு சுந்தர காண்டம் எடுத்துக்கொடுத்து, வாழ்க்கையின் சவால்களைத் தைரியமாகவும், ஆன்மீகமாயும் எதிர்கொள்ளச் செய்தவர்.

அவரைப் பற்றிப் பேசுவதை விட இந்நாளில் இராமனைப் பற்றிச் சிந்திப்பதையே விரும்பியிருப்பார் என்பதால் ‘உயிர் எழுத்து’-ல் அமைந்த, ராமனின் சரிதத்தைச் சொல்லும் பாடலை (அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து) என் தந்தையின் தாள்களில் வணக்கமாகச் சமர்ப்பிக்கின்றேன்.

அன்றொரு நாள் ராமன் வனம் சென்றதுவும்
ஆங்கவன் பொன்மானைக் கொன்றதுவும்
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்
உம்பியொருவனை ராமன் பெற்றதுவும்
ஊறுசெய் வாலிதனை அழித்ததுவும்
எம்பிரார்க்காய் அனுமன் கடல் கடந்ததுவும்
ஏற்றமிகு லங்கை தீப்பட்டதுவும்
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்
அஃதன்றே ஒரு பாடல் ராமகதை…!

‘அப்பா! இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்’ என்றே அவர் 75வது பிறந்த நாளன்று வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

Friday, February 11, 2011

அம்பகவ”:


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி:

ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம் : மாலை ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.

ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை . எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி, எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

நன்றி – கல்கி

Sunday, September 25, 2005

பீமரதசாந்தி

அதாத: ஸம் ப்ரவக்ஷ்யாமி சாந்திம் பீம ரதா பிதாம்
ஹாயனே ஸப்ததிதமே ம்ருத்யுர் பீம ரதோபவேத்
ஷன் மாஸான் ம்ருத்யு மாப்ணோதி தணஹாநிஸ்ததைவச
புத்ர தாராதி நாசஸ்ச த்ரவ்ய தான்ய பசுக்ஷய ஹ
தத்தோஷ சமநார்த்தாய சாந்திம் குர்யாத் விதானாதஹ
ஜன்ம மாஸே ஜன்மதினே ஜன்மர்§க்ஷவா பலான்விதே
-ஸ்ரீ சௌனக மஹரிஷி

விரிவுரை
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் 70-ம் ஆண்டில் பீமரதம் (மிக பயங்கரமான ரதம்) என்னும் வாஹனத்தில் ஏறி ம்ருத்யு (யமன்) நம்மைத் தீர்க்க (அழிக்க) வருகிறான். அது முடியாவிடில் நமது குழந்தைகளுக்கு மரணம், வ்யாதி, விபத்துக்கள் அல்லது குடும்பத்தில் குழப்பம், சண்டை முதலியவைகளை ஏற்படுத்துகிறான். அதுவும் முடியாவிடில் திருட்டு, தன நாசம், பிராணிகள் நாசம் முதலிய இழப்புகளை ஏற்படுத்துகிறான். இத்தனை இழப்புகளையும் நீக்க வேண்டுமானால் நமது ஜன்ம தினத்தன்று ம்ருத்யுஞ்ஜயனான ஸ்ரீ பரமேச்வரனை "ஸ்துஹி ஸ்ருதம்" என்னும் மந்திரம் கொண்டு வழிபடவேண்டும். மேலும் ப்ரும்மா, விஷ்ணு, துர்க்கை, அஷ்ட திக் பாலகர்கள் முதலிய தெய்வங்களை "பீமரத சாந்தி" என்னும் இம்முறையில் வழிபடுபவர்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுள், வியாதியற்ற வாழ்க்கை, குடும்பத்தில் ஒற்றுமை ஐஸ்வர்ய சம்ருத்தி முதலிய §க்ஷமங்களோடு வாழ்ந்திருப்பார்கள்.

விளக்கவுரை
ஸ்ரீ பரமேச்வரனுடைய அனுக்¢ரஹத்தினால் நமது எல்லா பாவங்களும் விலகி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மனஸ் ஸாந்தி முதலிய எல்லா நன்மைகளும் நமக்குக் கிடைக்க ஸ்ரீ ருத்ர ஏகாதசினி என்னும் இந்த ஜப ஹோம வைபவம் உதவுகிறது. 59-ம் வயது முடிவில் "உக்ரரத சாந்தி", 60 வயது முடிவில் "ஷஷ்டியப்த பூர்த்தி", 70 வயது முடிவில் "பீமரத சாந்தி", 80 வயது முடிவில் "சதாபிஷேகம்", 90 வயதில் "விஜயரத சாந்தி", 100 வயதில் "கனகாபிஷேகம்"- பிள்ளைவழிப் பேரனுக்குக் குழந்தை பிறந்த பிறகு "ப்ரபௌத்ர சாந்தி" முதலிய வைபவங்களைச் செய்து மேற்படி காலங்களில் ஏற்படும் வ்யாதி, ம்ருத்யுபயம் முதலியவற்றை நீக்கி ஸகல §க்ஷமங்களையும் அடையும்படி சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

-திரு பி. ஆர். ராஜா வாத்தியார், சென்னை

Saturday, September 24, 2005

பூத்தவளே!

'பூத்தவளே' எனத் தொடங்கும் அபிராமி அந்தாதி, மாத்தவளே என்கிறது அம்பிகையை. மாத்தவளே என்றால் அரிய பெரிய தவம் செய்தவள் என்பது பொருள். தவமே தானாகிய தாய் ஏன் தவம் செய்கிறாள்? சின்னப் பிள்ளைகளூக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்றால் சின்னப் பிள்ளை மாதிரியே நாம் நடந்து கொண்டு புரிய வைத்தால் லகுவில் புரியும். குழந்தைகட்கு 'அ-ஆ' சொல்லும் ஆசிரியை, குழந்தைகளை விடப் பெரிதாக வாயைத் திறந்து கொண்டு, குழந்தைத்தனமான முகத்துடன் 'ஆ' சொன்னால் அப்படியே குழந்தைக்குப் பதிந்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு சின்னப் பிள்ளைத்தனமாகப் பெரியவர்கள் சேட்டை செய்கிறார்களோ, அவ்வளக்கவ்வளவு விரைவாகக் குழந்தைகள் மனத்தில் அது பதியும்.'
நமக்கெல்லாம் தவத்தைச் சொல்லிக் கொடுக்க வந்த அம்பாள் மனுஷத்தனமாகத் தவமிருந்தால் தானே தவம் நம் தலையில் ஏறும். அப்படித் தவமிருந்த விஷயமே ஒரு பெரிய விழாவாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது ஒரு ஊரில்..பத்து நாள் திருவிழா. ஆடித் தபசு என்று சங்கரன்கோவிலில் நடைபெறும் பெருவிழா.

- ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் - திரு சுகி சிவம், வானதி பதிப்பகம்.

Friday, September 23, 2005

பஜனின் உள்ளர்த்தம்

பஜனின் உள்ளர்த்தத்தை பாபாவே ஒரு முறை விளக்கியிருக்கிறார்.

'ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி, உரத்த குரலில் கத்தினால், மரக்கிளைகளில் உட்கார்ந்திருக்கும் எல்லாப் பறவைகளும் பறந்தோடிவிடும். மனித வாழ்க்கை என்பதும் ஒரு மரம்தான். அதன்மேல் பலவகைப் பறவைகள் உட்கார்ந்து நம்மைத் திசை திருப்பும் ஒலிகளை எழுப்புகின்றன. அத்தகைய பறவைகள் எவை? காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் இவையெல்லாம் சேர்ந்து எழுப்பும் கலவையான ஒலியில் உங்களது மன அமைதியும் சமநிலையும் கெடுகின்றன. உரத்த குரலில் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா என்று பாடினால் அத்தகைய தீய பறவைகள் பறந்துவிடும். உங்கள் மனம் தூய்மையாகும். இதயம் அமைதியடையும்'

-குருவே சரணம், பிரபுநந்த கிரிதர்

Saturday, September 03, 2005

நித்யப் பிரளயம்

வாழ்நாள் முழுவதும் எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணை வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ¨க்ஷ வைத்துக்கொள்ளலாம். அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரிதான் என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. 'நித்யப் பிரளயம்' என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படித் தினமும் நாம் 'சாகிற' போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு 'சாக' முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்புக்கிடையே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேற நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸ¤லபமாக இருக்கும். ஆனால் பண்ணிப்பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷ¢யோ, நடராஜாவோ, தக்ஷ¢ணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ - எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த இஷ்டதெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸ¤க்கு ஆறுதலாகவும், ரம்யமாகவும் இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?' என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும். அப்படியே கண்ணைக் கசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். இப்படி ஏமாறாமல் பழகிக்கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சியில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.
-காஞ்சி மஹா பெரியவர்

முந்தைய பதிவுகள்

Followers